கனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை: நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணை நிரம்பியுள்ளதால் அணைக்கு வரும் மொத்த தண்ணீரும் உபரியாக பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பவானி ஆற்றில் வெள்ளம் பொங்கி வரும் புதுப்புனலாக பெருக்கெடுத்துள்ளது. திருப்பூர்,கோவை மாவட்ட மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் பில்லூர் அணை தென்மேற்கு பருவமழையின் புண்ணியத்தால் நிரம்பி வழிகிறது.
இந்த அணைக்கு நீர் வரத்து பவானி ஆறு மூலமே கிடைக்கிறது. உபரி நீரும் பவானி ஆற்றின் வழியாகவே வெளியேற்றப்படுகிறது.
நீலகிரி மலைத்தொடரில் உருவாகும் பவானி ஆறு கேரள மாநிலம் அட்டபாடி வழியாக பாய்ந்து, மீண்டும் தமிழகத்திற்கு திரும்பி பில்லூர் அணையை வந்தடைகிறது.
பில்லூர் அணையின் நீர் ஆதாரத்தை கொண்டு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்கள் குடிநீர் வசதி பெறுகின்றனர். கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் தற்போது பில்லூர் அணைக்கு 22 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் முழு கொள்ளளவு 100 அடியை எட்ட உள்ளது. தற்போது 97 அடிவரை தண்ணீர் நிரம்பியுள்ளது.
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை
அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை 9 மணி முதல் பவானி ஆற்றில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் மள மளவென உயர்ந்து வருகிறது. நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை குற்றாலத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளப்பெருக்கால் தற்காலிக சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.