20 வயசுதாங்க ஆகுது.. போலி ஆசாமியை நம்பி என் மகளை இழந்துட்டேனே.. கதறும் கோவை தந்தை
தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி உயிரிழந்ததால் போராட்டம் நடைபெற்றது
Recommended Video
கோவை: "மாதவிடாய் பிரச்சனைக்குதான் மகளை கூட்டிட்டு போனேன்.. இப்படி போலி ஆசாமியை நம்பி மகளையே இழந்துட்டேனே" என்று மாணவியின் தந்தை ஒருவர் கதறி கதறி அழுதது அனைவரையும் கலங்க செய்தது.
கோவை புதூர் நேதாஜி நகரைச் சேர்ந்த தம்பதி கணேசன் - மல்லிகா. இவர்களது மகள்தான் சத்யப்பிரியா. வயசு 20 ஆகிறது.
சத்யப்பிரியா கோவை ஆர்ட்ஸ் காலேஜில் 3-ம் வருட பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்து வருகிறார். இவருக்கு கொஞ்ச நாளாகவே மாதவிடாய் பிரச்னை இருந்திருக்கிறது.
சித்த வைத்தியம்
இதனால் அவஸ்தைப்பட்டு வந்த சத்யப்பிரியாவை, எத்தனையோ டாக்டர்களிடம் அழைத்து சென்றும், குணமாகவில்லை. அதனால், சொந்தக்காரர்கள் சொன்னபடி, செல்வபுரம் மனோன்மணி சித்த வைத்திய சாலைக்கு மகளை கடந்த ஜனவரி மாதம் அழைத்து சென்றனர். அந்த வைத்தியர் பெயர் குருநாதன். என்ன ஆச்சோ தெரியவில்லை... தவறான வைத்தியத்தால் சத்யப்பிரியா இன்று காலை இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
குருநாதர்
இதை பற்றி அவரது பெற்றோர் சொல்லும்போது, "வைத்தியர்கிட்ட போன ஒரு மாசத்திலேயே மகளுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்து. கொஞ்ச நாளில் முகமெல்லாம் வீங்கிடுச்சு. இதை போய் குருநாதர்கிட்ட கேட்டதுக்கு, எதுவும் பிரச்சனை இல்லைன்னு சொல்லி திரும்பவும் அதே மருந்தைதான் தந்தார்.
உறுப்புகள் பாதிப்பு
போன ஏப்ரல் 22-ம் தேதி உடம்பு ரொம்ப மோசமாயிடுச்சு. அதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தோம். மே 1-ம் தேதி சித்த வைத்தியர் குருநாதன் மீது செல்வபுரம் ஸ்டேஷனில் புகார் தந்தோம். இதுவரைக்கும் ஒரு நடவடிக்கையும் இல்லை. அவர் தந்த தப்பான மருந்தால்தான், என் மகளின் சிறுநீரகம், நுரையீரல் பாதிக்கப்பட்டுவிட்டது.
சாலை மறியல்
மாதவிடாய் பிரச்சனைக்காக போய், கடைசியில் என் பொண்ணை இழந்துட்டேன்.. இதுக்கு காரணமான குருநாதனை கைது செய்ய வேண்டும்" என்று கதறினர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி, சத்யப்பிரியாவின் உறவினர்களும் சேர்ந்து, அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
உறுதி அளித்தனர்
விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குருநாதரிடம் விசாரணை நடத்தியிருப்பதாகவும், சத்யபிரியாவுக்கு அவர் அளித்த மருந்துகளை ஆய்வுக்கு அனுப்பி இருப்பதாகவும் சொன்னார்கள். மேலும், ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவர் மீதும், மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர்தான் சத்யபிரியாவின் உடலை வாங்கினர்.