கோவையில் காட்டுமிராண்டிதனமாக தாக்கிய எஸ்.ஐ: மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
கோவை: ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது காவல் உதவி ஆய்வாளர் காட்டுமிராண்டிதனமாக தாக்குதல் நடத்திய விவகாரம் குறித்து 2 வாரத்தில் பதிலளிக்குமாறு கோவை மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Recommended Video
கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் பகுதியில், மோகன்ராஜ் என்பவர் ஸ்ரீ ராஜா என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் நேற்று இரவு சிலர் இரவு 10 மணிக்கு மேல் சாப்பிட வந்தனர். ஏற்கனவே சிலர் அந்த ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
11 மணிக்கு மேல் ஹோட்டலை மூட வேண்டும் என்ற அரசு கட்டுப்பாடு உள்ளதால் அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் முத்து ஹோட்டலில் இருந்த பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் மீது திடீரென லத்தியால் தாக்கி விரட்டினார். இதில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
கோவை ஓட்டலில் புகுந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை லத்தியால் தாக்கிய எஸ்ஐ இடமாற்றம்
பொதுமக்கள் மீது உதவி ஆய்வாளர் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கிருந்த சிசிடிபி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் உதவி ஆய்வாளரின் இந்த அடாவடிக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட காவல் உதவி ஆய்வாளர் முத்து காவல் கட்டுப்பாட்டை அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இடமாற்றம் செய்தது போதாது என கூறியுள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் அத்துமீறி நடந்துகொண்ட உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு சாத்தாக்குளத்தில் கடைகளை மூடாமல் இருந்த தந்தை மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவத்தோடு ஒப்பிட்டு பலரும் பதிவிட்டு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தடியடி தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு விசாரணைக்கு எடுத்தது. தாக்குதல் தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்குமாறு கோவை மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.