கோவையில் ஒரே பகுதியில் அதிர்ச்சி அளிக்கும் கொரோனா தொற்று பரவல்.. கிருமி நாசினி தெளிப்பு!!
கோவை: தமிழகத்தில் கொரோன தொற்று எண்ணிக்கை சென்னையை அடுத்து மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் அதிகரித்து வருகிறது. கோயம்புத்தூரில் இருக்கும் செல்வபுரத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் தொற்று எண்ணிக்கை 100ஐக் கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோயம்புத்தூரில் தொற்று இருக்கும் பகுதிகளில் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 105பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, செல்வபுரம், அசோக் நகர், கோவிந்தசாமி லே அவுட், ஆகிய பகுதிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்டு வரும் எம்ஜிஆர் மொத்த மார்க்கெட்டில் வியாபாரிகள் உள்பட 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது.
கோயம்புத்தூரில் குனியமுத்தூர், குறிச்சி, போத்தனூர் பகுதிகளில் கடந்த ஜூலை 4ஆம் தேதி ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதில் குனியமுத்தூரில் மட்டும் ஒரே குடும்பத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் ஜவுளிக் கடை ஒன்றில் மகளின் திருமணத்திற்கு துணிகள் வாங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
தமிழகத்தில் மொத்தமாக 95 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. அதில் 49 பரிசோதனை மையங்கள் அரசு சார்பிலும், 46 பரிசோதனை மையங்கள் தனியார் சார்பிலும் இயங்கி வருகின்றன. இதில் தனியார் ஆய்வகங்களில்தான் முறைகேடுகள் கொடிகட்டி பறப்பதாக சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. இதைத் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக கோயம்புத்தூரில் செயல்பட்டு வந்த நான்கு பரிசோதனை மையங்கள் மூடப்பட்டன.
24 மணி நேர கொரோனா பரவலில் உலகப் பட்டியலில் 2ஆம் இடத்தில் இந்தியா பகீர் ரிப்போர்ட்!!
செல்வபுரத்தில் குடியிருந்து வரும் எம்.எல்.ஏ., அம்மன் கே அர்ஜூனாவுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
சென்னையில் மட்டும் இதுவரை 1,082பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மதுரையில் 69, திருவள்ளூரில் 100, செங்கல்பட்டில் 128, காஞ்சிபுரத்தில் 36, ராமநாதபுரத்தில் 21பேர் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.