அடடா.. போறப்ப கூட மறக்கலையே விநாயகா.. சோகத்தில் கோவை மக்கள்
யானை விநாயகனை வனத்துறை மீட்டு சென்றதால் சோகம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
கோவை: "பணம் காச கண்டுபுட்டா புலி கூட புல்ல திங்கும்" என்ற வரிகளை கோவை இளைஞர்கள் ஸ்டேட்டஸ் வைத்து சோகத்துடன் இருக்கின்றனர். எல்லாம் பிடிபட்ட அந்த யானைக்காகத்தான்!
கோவை வனப்பகுதியில் இருந்து தடாகம் பகுதிக்கு 2 யானைகள் வந்துவிட்டன. 6 மாதமாக ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து ஊருக்குள்ளேயே சுற்றிவந்தன.
என்னவோ தங்களது சொந்த ஊர்போல இஷ்டத்துக்கு சுற்றி வந்த யானைகளை கண்ட மக்கள், அதற்கு சின்னதம்பி, விநாயகன் என்று பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தனர். இந்நிலையில், நேற்று வனத்துறையினர் யானைகளை பிடிக்க தீவிரமானார்கள். கும்கி யானைகளை கொண்டு வந்து, "ஆபரேஷன் விநாயக்" என்ற பெயரில் 2 காட்டு யானைகளை பிடிக்கவும் மும்முரமானார்கள்.
லாரியில் ஏற்றினர்
அப்போது விநாயகா அவர்களிடம் சிக்கியதும், அதற்கு மயக்க ஊசி போட்டனர். பின்னர் அதனை முதுமலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடானது. இதற்காக லாரியில் விநாயகனை ஏற்றினார்கள். அப்போது சமூக ஆர்வவலர்கள், யானைக்கு பெயர் சூட்டிய அந்த பகுதி மக்கள் என எல்லோரும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர்.
அமைதியான டைப்
விநாயகன் எப்பவுமே ரொம்ப அமைதியான டைப் என்கிறார்கள். பிடிபட்ட விநாயகன் கிளம்பும்போது, "இனி நாங்க உன்ன எப்ப பார்ப்போம்?" என்று மனம் வருந்தி சொன்னார்கள். ஏற்கனவே மயக்க ஊசி போட்டு சோர்வாக இருந்த விநாயகன், அந்த நிலையிலும், தனது தும்பிக்கையை தூக்கி காண்பித்தது.
சோக பாடல்கள்
இதை பார்த்ததும் மக்கள் இன்னும் கண்கலங்கி போய்விட்னர். விநாயகன் தும்பிக்கை தூக்கி சென்று வருகிறேன் என்பது போல சைகை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவுடன் சோக பாடல்களும் கலந்து இழைய விட்டுள்ளனர் அந்த பகுதி மக்கள்.
விடை கொடு மனமே
அது போதாதென்று, வீடியோ மீம்ஸ்கள் தயாராக்கி விட்டனர், துப்பாக்கி படத்தில் வரும் "மெல்ல விடை கொடு விடை கொடு மனமே. இந்த நினைவுகள் நினைவுகள் கனமே.. தாய்மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்" என்ற பாடல் பதிவிட்டுள்ளனர்.
பூமி தாங்குமா?
அத்துடன் ரஜினியின் படிக்காதவன் படத்தின் ஊரத்தெரிஞ்சுக்கிட்டேன் பாடலில் வரும் "பணம் காச கண்டுபுட்டா புலி கூட புல்ல திங்கும்" வரிகள், "நல்ல மனுசனுக்கும் மிருகத்துக்கும் விளக்கம் தெரியல. தெரியாம போட்டதிங்க தப்புக் கணக்குதான். நியாயங்கள் காயம் பட்டா பூமி தாங்குமா?" போன்ற பாடல்களை, விநாயகன் வீடியோவில் இணைத்து, அந்தப்பகுதி இளசுகள் சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ் வைத்து வருகின்றனர்.