கோவை சிறுமி வழக்கு; பலாத்காரத்தை பார்த்ததால் பாட்டியையும் கொன்று சந்தோஷ் நாடகமா?
கோவை: துடியலூரில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் சந்தோஷ் குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி கொல்லப்பட்ட அன்றே சந்தோஷின் பாட்டியும் இறந்ததால், பாட்டியையும் சந்தோஷே கொன்றுவிட்டு நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சியில் பெண்களை பலாத்காரம் செய்து ஒரு கும்பல் ஆபாச படம் எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழக மக்களின் நெஞ்சை உறுத்தி வருகிறது.
இந்த ரணமே இன்னும் ஆறாத நிலையில். கடந்த வாரம் திங்கள்கிழமை கோவை துடியலூரில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறாள்.
சமூக போராளி முகிலன் மீது குளித்தலை பெண் திடீர் புகார்
குற்றவாளி கைது
சிறுமி கொல்லப்பட்ட விவகாரம் கோவை மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் 6 நாட்களுக்கு பிறகு சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்த தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பக்கத்து வீட்டு பாட்டி
துடியலூர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அன்று அவரது வீட்டின் எதிரே சந்தோஷ் குமாரின் பாட்டி இறந்துவிட்டார். இதனால் துக்க வீடு என்பதால் யாருக்கும் சந்தேகம் வராமல் இருந்தது. சிறுமியின் கைகள் கட்டப்பபட்டு இறந்து கிடந்த நிலையில் ஒரு டீசர்ட் கண்டுபிடிக்கப்பட்டது.
காட்டிக் கொடுத்த டீசர்ட்
சிறுமியை வெளிநபர்கள் கடத்திச் சென்று இருக்க வாய்ப்பு இல்லை என்று நம்பிய போலீசார், அக்கம் பக்கத்து வீட்டினரிடம் டீசர்ட்டை காண்பித்து விசாரித்தனர். இதில் சந்தோஷ்குமார்தான் டீசர்ட்டுக்கு சொந்தக்காரர் என்பதை கண்டுபிடித்தனர்.
ஒப்புக்கொண்ட சந்தோஷ்
இதையடுத்து சந்தோஷ் குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் தற்போது நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்
கடத்திய சந்தோஷ்
தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ், துடியலூர் பணிமுனை அருகே உள்ள பாட்டியின் வீட்டில் தான் சமீப காலமாக வசித்து வந்துள்ளார். கஞ்சாவுக்கு அடிமையான அவர், வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு மேல் கடத்தி வந்து பாட்டின் வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.
சிறுமி கொலை
இதையடுத்து சிறுமியை காயப்படுத்திய சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமிக்கு பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு மிகப்பெரிய பிரச்னை வரும் என அறிந்த சந்தோஷ் சிறுமியை கொன்று, அதிகாலையிலேயே அருகாமையில் உள்ள பகுதியில் வீசிவிட்டு வந்திருக்கிறார்.
சந்தோஷ் மீது சந்தேகம்
இதனிடையே மனைவியை பிரிந்த சந்தோஷ், அவ்வப்போது வந்து பாட்டியுடன் வசித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பே இரண்டு மூன்று முறை சந்தோஷ் பாலியல் தொல்லை சிறுமிக்கு கொடுத்தாக கூறப்படுகிறது. இதனிடையே பலாத்காரத்தை பார்த்ததால் சந்தோஷே, பாட்டியை கொன்று இருக்கலோமோ என போலீசார் சந்தேகத்தில் உள்ளனர். ஏனெனில் சிறுமி இறந்த அன்று தான் பாட்டியும் இறந்துள்ளார். எனவே தற்போது விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி வருகிறார்கள். இன்னும் பல உண்மைகள் வெளியாகும் என தெரிகிறது.