மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு! கோவையில் முகாமிட்ட முகமது ஷாரிக்? லாட்ஜ் ஓனருக்கு வந்த சிக்கல்!
கோவை : மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷாரிக் கோவையில் தங்கி இருந்ததாக கூறப்படும் விடுதியின் உரிமையாளர் மங்களூர் போலீசில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஓடும் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதல் என கர்நாடக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்த முகமது ஷாரித் என்பவரின் மொபைல் எண்ணை வைத்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். முகமது ஷாரிக் ஏற்கனவே கடந்த 2020ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
மங்களூர் ஆட்டோ குண்டுவெடிப்பு: பொறுப்பேற்ற இஸ்லாமிக் கவுன்சில்- கோவை முபினுக்கும் தொடர்பா?
முகமது ஷாரிக்
அவர் கடந்த 2021 ஜூலை மாதம் ஜாமீனில் விடுதலையானார். முகமது ஷாரித் மீது பல்வேறு வழக்குகள் இருக்கும் நிலையில் நவம்பர் மாதம் 4ஆம் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தகவலின் அடிப்படையில் முகமது யாசின், முஜ் முனீர் என்ற இருவரை கர்நாடக காவல் துறை கைது செய்ததாக கூறப்படுகின்றது. இந்த வழக்கிலும் முகமது ஷாரிக்கை கர்நாடக மாநில போலீசார் தேடி வந்தனர்.
கோவையில் தொடர்பு
இந்நிலையில் ஜாமினில் வந்த பின் தலைமறைவாக இருந்த முகமது ஷாரிக் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதி மகிழ் வியன் அகம் என்ற லாட்ஜில் கடந்த செப்டம்பர் மாதம் வந்து தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அங்கு தங்கியிருந்த தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் உதகையை சேர்ந்த சுரேந்திரனை சந்தித்ததாகவும் கூறப்படுகின்றது.
சிம் கார்ட்
காந்திபுரத்தில் தங்கி இருந்த விடுதியில் பக்கத்து அறையில் தங்கியிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்தரிடம் பழகி அவருடைய ஆதார் ஆவணத்தை வைத்து சிம் கார்டு வாங்கி இருப்பதும். ஆனால் அந்த சிம் கார்டில் இருந்து கோவை உட்பட எந்த பகுதிக்கும் பேசவில்லை என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
என்.ஐ.ஏ.
சுரேந்திரனை உதகை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். முகமது ஷாரிக்கிற்கும், தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்திரனுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பின் விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வர வேண்டுமென அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கை என்.ஐ.ஏ.விசாரணைக்கு மாற்றி கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதி விசாரணை
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சிறப்பாக விசாரணை நடத்திய கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளை என்.ஐ.எ. அதிகாரிகள் சந்தித்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக முஹம்மத் ஷாரிக் தங்கி இருந்த விடுதியில் மங்களூர் போலீசார் விசாரணை நடத்தி விடுதி உரிமையாளர் காமராஜ் மேலாளர் முருகன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
உரிமையாளருக்கு சம்மன்
தொடர்ந்து அந்த விடுதியில் ஷாரிக் எவ்வளவு நாட்கள் தங்கினார், அவர் கொடுத்திருந்த ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இதை அடுத்து விசாரணைக்கு வர வேண்டும் வெளியூர் செல்லக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் முகமது ஷாரிக் வழக்கு தொடர்பாக விடுதி உரிமையாளர் காமராஜ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மங்களூர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாகவும் மூன்று நாட்களுக்குள் அவர் ஆஜராக வேண்டும் என அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.