கோவையில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா...நிலைமையை சமாளிக்க கூடுதல் படுக்கைகள் தயார்!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் தொடர்ந்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொடீசியாவில் 400 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையான கேஎம்சிஹெச் கூடுதலாக கோவில்பாளையத்தில் கொரோனா சிறப்பு மருத்துவமனை ஒன்றை அமைத்துள்ளது.
கோவையில் இருக்கும் கேஎம்சிஹெச் தனியார் மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என்று மருத்துவமனையில் சிறப்பு வார்டுகளை அமைத்துள்ளது. மருத்துவமனையில் இரண்டு தளங்களை ஒதுக்கியுள்ளது. மேலும், மருத்துவமனையின் பின்புறம் ஒரு கட்டிடத்தை இதற்கு என்றே ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், காளப்பட்டியில் 128 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைத்துள்ளது.
இதுவும் போதாது என்று தற்போது தமிழக அரசின் உத்தரவின்பேரில் கோவில்பாளையத்தில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அமைத்துள்ளது, இந்த மருத்துவமனை கடந்த 19ஆம் தேதி முதல் செயல்படத் துவங்கியுள்ளது.
இந்த மருத்துவமனையில் தனிப்பட்ட அறைகள், பகிரும் வகையிலான அறைகள், மருத்துவமனை ஊழியர்களுக்கு என்று தனி அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் இங்கு பின்பற்றப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிச்சாமி கூறுகையில், ''அரசுக்கும், மக்களுக்கும் ஒத்துழைப்பு நல்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மருத்துவமனை நிர்வாகம் எடுத்து வருகிறது. கொரோனா இல்லாமல் வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வருபவர்கள் அவிநாசி சாலையில் இருக்கும் எங்களது மருத்துவமனைக்கு வரலாம். மேலும், காளப்பட்டியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என்று தனி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு என்று சிறப்பு மருத்துவமனை அமைத்து இருக்கும் கேஎம்சிஹெச் மருத்துவமனை கொரோனாவுக்கான முதல்வர் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மேலும், சரவணம்பட்டி, கோபியில் கொரோனா நிவாரணத்துக்கு என்று பத்து லட்சம் ரூபாய் அளித்துள்ளது.
இந்த நிறுவனங்களுக்குதான் இனி சுக்கிர திசை... குவிந்து கிடக்கும் வேலைகள்.. 50 லட்சம் வரை சம்பளம்!
கோவையில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நிலைமையை எதிர்கொள்ள சமீபத்தில் கொடீசியாவில் கூட கூடுதலாக 400 படுக்கைகள் அமைக்கப்பட்டது. இங்கு இதுவரை 300 படுக்கைகளில் நோயாளிகள் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், இஎஸ்ஐ மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று தீவிரம் இருக்கும் நிலையில், திருப்பூர், நீலகிரியில் இருந்தும் நோயாளிகள் கோவை மருத்துவமனைகளுக்குத்தான் கொண்டு வரப்படுகின்றனர்.