கோவையில் மருமகனை குத்தி கொலை செய்த மாமனார்.. அதே நாளில் மகளுக்கு பிறந்தது ஆண் குழந்தை
Recommended Video
கோவை: கோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்ததால் ஆத்திரமடைந்த மாமனார் மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்நிலையில் கொல்லப்பட்டவரின் நிறை மாத கர்ப்பிணி மனைவிக்கு ஆண் குழந்தை நேற்றே பிறந்துள்ளது.
கோவை இடையர்பாளையத்தை அடுத்த சோப்பு கம்பெனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். பெயிண்டரான இவர் கவுண்டம்பாளையம் சக்தி நகரைச் சேரந்த தங்கமணி என்பவரது மகள் ஷாலினியை கடந்த ஒரு வருடத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்தார்.
இந்நிலையில் பத்து மாத நிறைமாத கர்ப்பிணியான ஷாலினியை பிரசவத்திற்காக கடந்த இரு தினங்களுக்கு முன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் போதிய அளவு இரத்தம் இல்லாத்தால் அவரை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க இயலாது என மருத்துவர்கள் தரப்பில் கூறினார்களாம்.
வேலைக்கு செல்லாத ராஜேந்திரன்
இதற்கிடையே கடந்த சில மாதங்களாக ராஜேந்திரன் சரியாக செல்லாமல் இருந்தாராம். இதனால் மருத்துவமனையிலிருந்து திரும்பிய ஷாலினி கவுண்டம்பாளையம் செட்டியார் அம்மா பகுதியிலுள்ள ஷாலினியின் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.
மாமியார் கன்னத்தில் அறைந்த மருமகன்
இதனையடுத்து ஷாலினியை தேடிச் சென்ற ரஜேந்திரன் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அப்போது ஷாலினி தாய் மீனா சரியாக வேலைக்கு செல்லாத உன்னுடன் என் மகளை அனுப்ப மாட்டேன் என மறுத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் மாமியாரின் கன்னத்தில் அறைந்து விட்டு அப்பகுதியை விட்டு சென்றுள்ளார். இது குறித்து மீனா தனது கணவரான தங்கமணி குமாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தங்கமணி மருமனான ராஜேந்திரனிம் விசாரித்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
விரட்டி விரட்டி கத்தியால் குத்தினார்
இதனால் ஆத்திரமடைந்த தங்கமணி குமார் அப்பகுதியிலுள்ள நியாயிவிலை கடை அருகில் சென்று கொண்டிருந்த ராஜேந்திரனின் முதுகில் தான் வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதனால் உயிருக்கு பயந்து ஓடிய ராஜேந்திரனை துரத்தி சென்ற தங்கமணி குமார் தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வயிற்றில் குத்தியதில் ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த அப்பகுதிவாசிகள் ரத்த வெள்ளத்தில் மிதந்த ராஜேந்திரனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ராஜேந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிசெய்தனர்.
மாமனார் தப்பியோட்டம்
இதனையடுத்து சம்பவ இடத்து விரைந்த துடியலூர் காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருமகனை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தங்கமணி குமாரை வலை வீசி தேடி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஷாலினிக்கு கோவை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.