அம்மன் சிலை மீது அமர்ந்து இருக்கும் கிளி.. கோவை பிளேக் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பரவசம்
கோவை: கோவையில் உள்ள பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் ஒரு பச்சை கிளி அம்மன் மீது அமர்ந்துள்ளதால் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்துள்ளனர்.
பாப்பநாய்க்கன் பகுதியில் அமைந்துள்ள, பிளேக் மாரியம்மன் கோயில், சுற்று வட்டாரத்தில், மிகவும் பிரபலம். நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து கோவில் நிர்வாகம் பக்தர்கள் வழிபாட்டுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்த நிலையில்தான், பச்சை கிளி ஒன்று, கருவறைக்குள் பறந்து அமர்ந்து, பிளேக் மாரியம்மன் சிலை மீது அமர்ந்து அம்மனை பார்த்தபடி உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் சிலை போல இந்த காட்சி தென்படுகிறது. அம்மன் சிரித்த முகத்துடன் களையாக அருள்பாலிக்கும் சிலையின் மீது கிளியும் வந்து அமர, அந்த இடமே பக்தி பரவசத்திற்கு உள்ளாகியுள்ளது.
பக்தர்கள் குவிந்து இந்த அற்புதக்காட்சியை பார்த்து வருகிறார்கள். செல்போன்களில் படம் எடுக்கிறார்கள். ஆனால் எந்த சத்தத்திற்கும் அந்த கிளி அசரவில்லை. அம்மன் வலது தோளில் அமர்ந்து இருந்து அசைய மறுக்கிறது.
இந்த தகவலை அறிந்து பிற பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கிறார்கள்.