கொரோனாவால் குழப்பம்.. கோவையில் பஸ் போக்குவரத்து குறைகிறது.. பொருட்களை வாங்கக் குவியும் மக்கள்.. !
கோவை: கொரோனா வைரஸ் தாக்கத்தால் கோவை மற்றும் திருச்சியில் சாலைகளில் போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது. கேரளாவை ஒட்டி உள்ள நகரம் என்பதால் கோவையில் மளிகை கடைகளில் மக்கள் அதிகமாக குவிந்து பொருட்களை வாங்கி குவித்து வருகிறார்கள்.
சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் உலகெங்கிலும் ஆட்கொண்டு வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுமைக்கும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டதன் காரணமாகவும், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டதாலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சாலைகளில் ஆட்கள் நடமாட்டம் குறைந்து விட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டு பேரை இதுவரை பாதித்துள்ளது. ஒருவர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஒருவருக்கு மட்டுமே கொரோனா தமிழகத்தில் உள்ளது.
பாதி பேருந்துகள்
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் கேரளாவில் 26 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரளாவை ஒட்டி உள்ள கோவை நகரில் கொரோனா பாதிப்பு குறித்த பீதி நிலவுகிறது . கோவையில் இருந்து பல ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வெகுவாக குறைந்துள்ளது. திருச்சி, மதுரைக்கு முன்பு 10, 15 நிமிடத்துக்கு ஒரு பஸ் இருக்கும். தற்போது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. பாதிக்கும் குறைவான பஸ்களே இயங்குகிறது.
மக்கள் அச்சம்
மளிகைக் கடைகளில் கடந்த 2,3 நாட்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் பொருட்கள் வேகமாக காலியாகிறது. கூட்டமும் அலை மோதுவதாக கூறுகிறார்கள். சிறிய மொத்த மளிகைக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் இருக்கிறது. பொருட்கள் தட்டுப்பாடு இதுவரை இல்லை. ஆனால், லாரிகள் இயங்குவதை பொறுத்தே பொருட்கள் கிடைக்கும் என மளிகைக் கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.
போக்குவரத்து குறைவு
தற்போது கேரளா வழியில் இருந்து வரும் போக்குவரத்து அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், மக்கள் இடையே மளிகைப் பொருட்கள் கிடைக்காது என்று தவறான வதந்தியால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவித்த நாளில் இருந்தே கோவையில் சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. தினமும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து வருகிறது.
பயணங்கள் குறைவு
திருச்சியில் கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததையொட்டி, திருச்சி மண்டலத்தில் 50 அரசு பஸ்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியூர் பயணிப்பதை பயணிகள் தவிர்க்க வேண்டும் என்று அறிவித்ததன் காரணமாக பலர் பஸ் பயணத்தையே தவிர்த்து விட்டனர். இதனால், பஸ்சில் பயணிப்போர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் சத்திரம் பஸ் நிலையம் பயணிகள் இன்றி வெறிச் சோடின.
வசூலும் பாதியாக குறைவு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல பொதுமேலாளர் ராஜ்மோகன் இதுகுறித்து கூறுகையில். "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் ஒரு நாளுக்கு சராசரியாக 1 லட்சத்து 35 ஆயிரம் பயணிகள் வந்து செல்கிறார்கள். பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து தேவைக்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்கி வந்தோம். தற்போது, பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை குறைந்து விட்டதால் வசூலும் வெகுவாக குறைந்து விட்டது.
பல ஊர்களுக்கு
எனவே, திருச்சி மண்டலத்தில் உள்ள திருச்சி, மணப்பாறை, உப்பிலியபுரம், லால்குடி, துவாக்குடி, அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட 13 கிளை பணிமனைகளில் இருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு இயக்கப்பட்டு வந்த 50 அரசு பஸ்களின் இயக்க சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பஸ் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி? என்று துண்டு பிரசுரங்களும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.‘