பயங்கரவாதிகளுடன் தொடர்பு.. கோவையில் மேற்கு வங்க இளைஞரிடம் விசாரணை
கோவை: பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மேற்கு வங்க இளைஞரிடம் கோவை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின் போது அங்குள்ள தேவாலயங்கள் உள்பட 7 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கியிருப்பதாக முகமது அசாருதீன், அகரம் ஜிந்தா, இதயத்துல்லா, அபுபக்கர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆஹா..அடுத்தது இவரா...! ஆறுகளை புனரமைக்கும் பணியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
உளவுத் துறை
இந்த நிலையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது தாக்குதல் நடத்த பாகிஸ்தான், இலங்கையை சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இயல்பு நிலை
இந்த பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஒரு வாரத்துக்கு பிறகே இயல்பு நிலை திரும்பியது.
பழுது பார்த்தல்
எனினும் கோவை மாநகர போலீஸார் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் யாரேனும் தொடர்பு வைத்து உள்ளார்களா என கண்காணித்து வந்தனர். கோவை இடையர் வீதியில் உள்ள செல்போன் கடைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவர் தனது செல்போனை பழுது பார்க்க கொடுத்துள்ளார்.
அதிர்ச்சி
அதனை வாங்க அந்த இளைஞர் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த செல்போன் கடைக்காரர் அதனை ஆய்வு செய்தபோது அதில் துப்பாக்கி குறித்து தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்போன் கடை உரிமையாளர் போலீஸில் புகார் செய்தார்.
மேற்கு வங்கம்
போலீஸார் அந்த செல்போனை ஆய்வு செய்தனர். பின்னர் அந்த போன் கோவை இடையர் வீதியில் வசித்து வரும் பாரூக் கவுசீருக்கு (25) சொந்தமானது என தெரியவந்தது. இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
வாட்ஸ் ஆப் குழு
மேலும் இவர் இங்கு தங்கி நகை பட்டறையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவர் பாகிஸ்தானை சேர்ந்த முஜாகிதீன் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த குழுவில் துப்பாக்கி தொடர்பான தகவல்களை அவர் பரிமாறி இருப்பது தெரியவந்தது.
பயங்கரவாதிகள்
இதைத் தொடர்ந்து பாரூக் கவுசீரை கோவை மாநகர் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் இவருக்கு தொடர்பு உள்ளதா என விசாரிக்கப்பட்டது.