பெண்களுக்கு ஒரு ஹெல்த்தி செய்தி... பிளாஸ்டிக்கே இல்லாமல்.. புளித்த கீரையில் நாப்கின்கள்.. சூப்பர்
Recommended Video
கோவை: பிளாஸ்டிக்கால் செய்யப்படும் நாப்கின்களால் உடலுக்கு கேடு என்பதால் இயற்கையை தேடி அலைந்து கொண்டிருக்கும் நிலையில் புளித்த கீரையின் தண்டில் நாப்கின்களை செய்து அசத்தி வருகின்றனர் கோவையை சேர்ந்தவர்கள்.
ஒரு பெண் சராசரியாக, தன் வாழ்நாள் முழுக்க 15,000 சானிடரி நாப்கின்களை பயன்படுத்துகிறார். பொதுவாக நாம் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நாப்கின்களில் 80% பிளாஸ்டிக் இருக்கும்.
இதனால் ஒரு நாப்கின் முழுவதுமாக மட்க, 700 - 900 ஆண்டுகள் ஆகிறது. இப்படி பிளாஸ்டிக்கும் ரசாயனங்களும் கலந்து உருவான நாப்கின்கள் புற்றுநோய் முதல் பல தொற்று நோய்கள் ஏற்பட மூலக்காரணமாக அமைகின்றன.
தீவிரமாகும் சண்டை.. திமுகவை தொடர்ந்து விமர்சிக்கும் சிதம்பரம் டீம்.. கூட்டணியில் என்னதான் நடக்கிறது?
கேடு விளைவிக்கும்
உடலுக்கும் இயற்கைக்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் நாப்கின்களிலிருந்து நம்மை விடுவிக்க, புளித்த கீரை தண்டில் நாப்கின்கள் தயாரித்து அசத்தியிருக்கின்றனர். கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவர்கள் இருந்து தொழில் முனைவோர்கள் ஆகியுள்ளனர் பேஷன் டெக்னாலஜி மாணவர்கள் நிவேதா, கௌதம்.
வீணாகி
இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது , நாங்கள் ஒரு ஆய்விற்காக புளித்த கீரையை விவசாயம் செய்பவர்களை சந்தித்தோம் . இந்த கீரையின் இலைகள் உணவிற்கு பயன்பட்டாலும், அதன் தண்டுகள் வீணாகிப் போவதாக விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
நுண்ணுயிர்
ஃபேஷன் டெக்னாலஜி மாணவர்கள் என்பதால், எந்த நாரில் என்ன உடைகளை நெய்யலாம் என்று உடனடியாக தங்களுக்குள் ஒரு கணக்கு போடுவார்கள். அது போலவே அந்த தண்டில் இருந்து நாரினை எடுத்து அதை துணியாக்கி ஆடை வடிவமைத்தோம். முதலில் புளிச்ச கீரை தண்டில் இருந்து ஆடைகள்தான் தயாரித்தோம். பிறகு தான் அந்த துணிகள் நல்ல உறிஞ்சும் சக்தியும், நுண்ணுயிரைக் கொல்லக்கூடிய திறன் இருப்பது தெரிய வந்தது. அப்போதுதான், இதை ஏன் சானிட்டரி நாப்கின்களாக பயன்படுத்தக்கூடாது என்று தோன்றியது.
புளித்த கீரைகள்
பல ஆராய்ச்சிக்கு பின், இரண்டு ஆண்டுகள் கழித்து, 100% இயற்கை மூலிகைகளால் ஆன ப்ளிஸ் பேட்ஸ் உருவானது. வெளியே மிருதுவாகவும் தோலை பாதிக்காத வண்ணம் இந்த நாப்கின்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை நாப்கின்கள் 4 மாதத்தில் முழுமையாக மட்கக்கூடியது. புளித்த கீரை செடிகள் வளர சிறிய அளவு தண்ணீரே போதும்.
நார்கள்
இந்தச் செடிகள் இயற்கையாகவே மாசுப்பாட்டையும் கட்டுப்படுத்தும் தன்மையுடையது. புளித்த கீரை தண்டுகளில் இருந்து, நாங்களே உருவாக்கிய கருவியைக் கொண்டு நார்களை பிரித்து எடுத்து, துணியாக செய்தோம்.
முழு உருவம்
ப்ளிஸ் பேட்ஸ்க்கு ஒரு முழுமையான உருவம் கிடைக்கும் வரை நிறைய ஆய்வுகள் மேற்கொண்டோம். அதில் பல முன்மாதிரிகளை உருவாக்கி, அதை எங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கும், நண்பர்களுக்கும் உபயோகிக்க கொடுத்தோம்.
அனுமதி சான்று
அவர்களுடைய ஆலோசனைகளை கேட்டு மாற்றங்கள் செய்த பின்னரே ப்ளிஸ் பேட்ஸை முறையாக விற்பனைக்கு வெளியிட்டோம். இது, அரசாங்கத்தின் அனுமதி சான்றுடன், அங்கீகரிக்கப்பட்ட நாப்கின்கள் என்கின்றனர்.
துணி நாப்கின்கள்
மென்சுரல் கப், துணி நாப்கின்கள் இருக்கும் போது, நீங்கள் ப்ளிஸ் பேட்ஸ் பரிந்துரைப்பது ஏன் என்று கேட்டதற்கு, துணி நாப்கின்களும் உடலுக்கு நல்லதுதான். இயற்கைக்கும் நல்லது. ஆனால் அனைவராலும், ஒவ்வொரு முறையும் துணி நாப்கின்களை முறையாக சுத்தம் செய்ய முடியாது.
3 மணி நேரம்
சரியாக சுத்தம் செய்யாவிட்டால், அதுவே நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எந்த நாப்கினாக இருந்தாலும், 3-4 மணி நேரத்திற்குள் அதை மாற்ற வேண்டும். மென்சுரல் கப்களை கூட, மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து பயன்படுத்துவதே சிறந்தது.
உடலுக்கு சிறந்தது
இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. மேலும், மென்சுரல் கப்களை பொருத்தவரையில், அது பெண் உறுப்புக்குள் செலுத்தி பயன்படுத்த வேண்டும். எப்போதுமே, வெளிப்புறம் பயன்படுத்தும் பொருட்களே உடலுக்கு சிறந்தது.
சிலிக்கான்
மென்சுரல் கப்களை பள்ளிச் செல்லும் சிறுமிகள் பயன்படுத்துவது கடினம். அவர்கள் சரியாக உடலுக்குள் பொருத்தவில்லை எனில், அதுவே சிக்கலாக முடியும். மேலும் அது சிலிக்கான், ரப்பரால் தயாரிக்கப்பட்டது. அதைவிட இயற்கை மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட நாப்கின்கள், உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது என்கின்றனர் இருவரும் கோரசாக.
ஆர்கானிக் கடை
சுய சக்தி விருது, I3 விருது, சத்ர விஸ்வகர்மா விருது என்று பல விருதுகள் இவர்களின் புது முயற்சிக்கு கிடைத்துள்ளது. இந்த நாப்கின்களை வாங்க விரும்புபவர்கள், ஆர்கானிக் கடைகளை அணுகி, அங்கு பெற்றுக் கொள்ளலாம்.