கொரோனா போயிரும்னத கூட பொறுத்துகிட்டோம்.. 13 முறை மெல்லனும், வல்லரசு ஆகலாம்னு விட்டீங்க பாரு ஒரு கதை
கோவை: "கொரோனாவை ஒரே நாளில் குணப்படுத்தும் என்று சொன்னதைக் கூட பொறுத்துக்கலாம்.. ஆனால் இந்த பார்முலாவை அயல்நாட்டுக்கு விற்பனை செய்து இந்தியா வல்லரசாகும்னு விட்டீங்க பாருங்க ஒரு கதை.. அதைத்தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை" என்று கொந்தளிப்பில் இருக்கிறார்கள் கோவை மாவட்ட மக்கள்.
13 முறை வாய்க்குள் மென்று சாப்பிட்டால் போதும், கொரோனா போயே போச்சு.. என்று இதற்கு விளக்கவுரை வேறு கொடுத்தார்களாம் அந்த இனிப்பகம். இதனால்தான், இன்னமும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள் மக்கள்.
கடந்த சில நாட்களாக மக்கள் கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வந்தது ஒரு பிட் நோட்டீஸ். ஒரே நாளில் கொரோனா குணமாகும் அதிசயம் என்று தலைப்பு போட்டு கோவையை சேர்ந்த நெல்லை லாலா ஸ்வீட்ஸ் செய்திருந்த விளம்பரம்தான் அது.
'கொரோனாவை கொல்லும் மைசூர்பா..' கிலோ ரூ.800.. சிக்கிய கோவை இனிப்பகம்.. சீல் வைத்த அதிகாரிகள்
என்னது.. புனிதப்போரா?
கொரோனாவுக்கு எதிரான மனித இனத்தை பாதுகாக்கும் புனித போரில் (மூன்றாம் உலகப்போரில்) நீங்களும் பங்கு எடுக்க உங்கள் பகுதியில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா பாசிட்டிவ் நபர்கள் மற்றும் அது சம்பந்தமாக அரசு கூறும் அறிகுறிகள் தென்படுபவர்கள் இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தவும். நாங்கள் எங்களது மூலிகை மைசூர்பாவை பாதித்தவர் வீடு தேடிச் சென்று இலவசமாக கொடுக்க தயாராக இருக்கிறோம். நாங்கள் இலவச சேவை செய்வதால் சரியான நபர்களை மட்டும் பரிந்துரைக்கவும். ஏனெனில் அவர்களால் மற்றவர்களுக்கு பரவாமல் நம்மால் தடுக்க முடியும் (கொரோனாவை முளையிலேயே வேரறுக்க முடியும்). கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி காண முடியும்.
அல்டிமேட் வாசகம்
மத்திய அரசு விரும்பினால் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் இதன் பார்முலாவை (சூத்திரத்தை) எந்தவித பணம், பொருள் எதிர்பார்ப்பும் இன்றி இலவசமாக தர தயாராக உள்ளோம். மற்றும் இந்திய அரசு மூலம் அயல்நாடுகளுக்கு விலைக்கு விற்க இந்திய அரசை நிர்பந்தித்து 2020ஆம் ஆண்டு இந்தியா வல்லரசு ஆகும் என்ற மேதகு அப்துல்கலாம் ஐயா அவர்களது கனவு நிறைவேற, மற்றும் இறந்த அன்னாரது ஆன்மா சாந்தியடைய துணை நிற்போம்.
வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்
ஒவ்வொரு இந்தியக் குடிமக்களின் கனவு நிஜமாக, அறிவுரை தந்த மேதகு கலாம் அய்யா அவர்கள் கண்ட கனவு வீண்போகாது. இவ்வாறு நோட்டீசில், குறிப்பிட்டு விட்டு, கடைசியில் ஒரு பஞ்ச் டயலாக் வேறு. அது என்ன தெரியுமா? "இந்தியாவின் வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்". படித்து பார்க்கும் உங்களுக்கே கடுப்பாக இருக்கிறதே, இதை நம்பி ஏமாந்தவர்கள் நிலைமையை எண்ணிப் பாருங்கள்.
13 முறை மென்று, வாயை மூடி..
இதில் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? இன்னொரு விளம்பர துண்டு பிரசுரத்தில், இவர் தயாரித்த மைசூர் பாக்கை, ஒரு நாளைக்கு 4 முறை சாப்பிட வேண்டும். ஒவ்வொருமுறையும், 13 முறை வாய்க்குள் வைத்து மென்று சாப்பிட வேண்டும் என்று 'பத்தியம்' வேறு சொல்லியிருக்கிறார்கள். அதுவும் உதடு திறந்து விடவே கூடாதாம். அப்படி சாப்பிட்டால்தான் கொரோனா குணமாகுமாம். இது எதற்கு என்றால், மைசூர்பா சாப்பிட்டு கொரோனா குணமாகவில்லை என்று சொல்லி யாராவது, கேள்வி கேட்டால், "நீங்கள் சாப்பிடும் போது உங்களை அறியாமல் வாயை திறந்து இருப்பீர்கள்" என்று சமாளிப்பதற்கு.
எதிர்ப்பு சக்தி மட்டும் போதுமா
இந்தியா வல்லரசாகுவதற்கு பார்முலா கொடுக்கிறேன்.. அப்துல் கலாம் கனவு நனவாகிறது.. 13 முறை வாயில் வைத்து நன்கு மென்று சாப்பிடுங்கள்.. என்றெல்லாம் உலக விஞ்ஞானத்தோடு வீம்பாக விளையாடியுள்ளார், இனிப்பக உரிமையாளர் ஸ்ரீராம். இதை அறிந்துதான் ஓடிச்சென்று சீல் வைத்துள்ளனர் அதிகாரிகள். இனிப்பக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒருவழியாக நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர் கோவைவாசிகள். ஆனால் இது போல தமிழகத்தில் எந்த எந்த மூலையில் எந்த எந்த கடைகள் இருக்கின்றனவோ தெரியவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே கொரோனாவை தடுத்து விடாது. சமூக இடைவெளி விட்டு இருப்பதும், முக கவசம் அணிவதும்தான் கொரோனாவை தடுக்கும் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு வராதவரை இது போன்ற நிறுவனங்கள் போலி விளம்பரத்தின் மூலம் காசு பார்க்கத் தான் செய்யும்.