அங்க என்ன வாழைக்குலையெல்லாம் கட்டிருக்கு.. ஓ.. டாஸ்மாக் கடை திறப்பா.. அப்பச் சரி அப்பச் சரி!
கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை ஒன்றில் வாழை மரம் தோரணம் கட்டி ஹோமம் வளர்த்து தயாராக உள்ளது போல் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video
கொரானா வைரஸ் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்றுடன் 43 நாட்கள் ஊரடங்கு முடிந்துவிட்டது.
இப்போது 3ம் கட்டமாக ஊரடங்கு வரும் மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3ம் கட்ட ஊரடங்கில் தமிழகத்தில் சில தொழில்களுக்கு மட்டும் தளர்வு அரசு ஏற்படுத்தி உள்ளது.
நாளை திறக்கப்படுகிறது
அத்துடன் கொரோனா பாதிக்காத பகுதிகளில் மதுக்கடைகளை நாளை முதல் திறக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் தமிழகத்தில் திறக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளில் யார் யார் எப்போது மது வாங்க வேண்டும் என்பது குறித்த நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடௌனுக்கு மாற்றம்
மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்த பொழுது மது பிரியர்கள் கடைகளை உடைத்து மது கடத்தலில் ஈடுபட்டதால் அனைத்து மதுக்கடைகளில் இருந்து மதுக்கள் மண்டம் மற்றும் குடௌன்களுக்கு மாற்றப்பட்டன. கோவைப்பகுதியில் மதுவகைகள் மதுக்கரை குடௌனுக்கு மாற்றப்பட்டது.அரசு தற்போது மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளதால் ஆயத்த பணிகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.
பூஜை செய்துள்ளனர்
கோவை பகுதியில் மதுக்கடைகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டு இருந்து நாளை திறக்க உள்ள நிலையில் ஊழியர்கள் கடைகளை சுத்தம் செய்து வெள்ளை அடித்தும் இன்று வரும் மதுவகைகளை கடைகளில் அடுக்க ஆயத்தமாகி உள்ளனர். இந்நிலையில் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் இயங்கிவரும் ஒரு மதுக்கடையில் வெள்ளையடித்து கடைகள் முன்பு வாழை மரம் தோரணம் கட்டியதுடன் ஹோமம் வளர்த்து சிறப்பு பூஜைகளும் ஊழியர்கள் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
50 நபர்களுக்கு டோக்கன்
மேலும் நாளை கடைகளுக்கு மது வாங்க வருபவர்கள் வரிசையில் சமூக இடைவெளி கடைப்பிடித்து வாங்கி சொல்ல வசதியாக தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒரு மணி நேரத்திற்கு 50 நபர்களுக்கு டோக்கன் கொடுத்து ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு மட்டும் மது கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.