ஆரஞ்ச் மண்டலத்திலிருந்து ரெட் ஜோனிற்குள் வருகிறதா கோவை?.. மக்கள் அதிர்ச்சி
கோவை: ஆரஞ்ச் மண்டலத்திலிருந்து ரெட் ஜோனிற்குள் கோவை கொண்டு வரப்படும் அச்சம் நிலவுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மட்டும் 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 203 பேர் சென்னைவாசிகள் ஆவர்.
அண்மையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் கொரோனா பாதிப்பை வைத்து சிகப்பு, ஆரஞ்ச், பச்சை ஆகிய மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. ஒரு மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்தால் அது சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
8 பேர்
சுத்தமாக பாதிப்பே இல்லை என்றால் அது பச்சை மண்டலமாக வரையறுக்கப்படும். இந்த நிலையில் கோவையில் கொரோனா பாதித்தோர் 142 ஆக இருந்த நிலையில் 134 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். வெறும் 8 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
4 பேருக்கு கொரோனா
இதனால் இந்த மாவட்டம் ஆரஞ்ச் மண்டலத்திற்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் கோவை கவுண்டம்பாளையத்தில் 44 வயது நபர் கொரோனா வைரஸால் நேற்று பலியாகிவிட்டார். அதோடு வேலாண்டிபாளையம் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், கரும்புக் கடை பகுதியைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி என நேற்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.
சிகப்பு மண்டலம்
இதனால் நேற்று நிலவரப்படி கோவையில் கொரோனா எண்ணிக்கை 146 ஆக உயர்ந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துவிட்டதால் ஆரஞ்ச் மண்டலத்தில் இருந்து சிகப்பு மண்டலத்திற்குள் கொண்டு வரப்படும் அபாயம் உள்ளது.
கோவை மக்கள்
திடீர் எண்ணிக்கை உயர்வு மற்றும் பலி ஆகியவற்றால் கோவை சிகப்பு மண்டலத்திற்குள் கொண்டு வரப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது. இதனால் கோவை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.