ஓமன் நாட்டில் கோவை பெண்ணுக்கு சித்ரவதை.. கலெக்டரிடம் பரபரப்பு புகார்
Recommended Video
கோவை: ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற தனது தாயை ஏஜென்சியினர் அடித்து சித்ரவதை செய்து அவரை இந்தியாவிற்கு வர முடியாதபடி கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாக அவரது மகன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அம்மன்குளத்தை சேர்ந்த நாகராஜின் மனைவி சாமுண்டீஸ்வரி (43). இவர் பொள்ளாச்சியை சேர்ந்த அஸ்லாம்கான் என்பவரின் மூலம் டூரிஸ்ட் விசாவில் வீட்டு வேலைக்காக ஓமன் நாட்டிற்க்கு சென்றுள்ளார்.
மேலும், சாமுண்டீஸ்வரியை வேலைக்கு அனுப்ப ஓமன் நாட்டில் உள்ள ஏஜென்ஸியிடம் அஸ்லாம்கான், ரூ.1,50000 வாங்கியுள்ளார். இந்தநிலையில் ஓமன் நாட்டில் உள்ள ஏஜென்ஸியினர் தன்னை அடித்து கொடுமைபடுத்துவதாக தனது மகன் விக்னேஸிடம் சாமுண்டீஸ்வரி தொலைபேசியில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதனால் தனது தாயாரை ஓமன் நாட்டில் இருந்து மீட்டு தருமாறு அவரது மகன் விக்னேஷ் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் இது குறித்து உறவினர் சித்ரா கூறியதாவது:
என் அத்தையை வீட்டுக்கு வேலைக்காக அழைத்து சென்ற ஏஜென்சியினர் உணவு கொடுக்காமல், அடித்து சித்ரவதை படுத்தி வருகின்றனர். அதேபோல அவரிடம் இருந்த செல்போனையும் பறித்து வைத்துள்ளனர்.
இதனால் அவரின் நிலைமை கேள்விகுறியாக உள்ளது. ஆகவே சாமுண்டீஸ்வரியை உடனடியாக ஓமனில் இருந்து மீட்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.