எடப்பாடியார், ஓபிஎஸ் கோவை வர காத்திருக்கேன்.. பகீர் மிரட்டல்.. சிக்கிய 'மனித வெடிகுண்டு' சகுந்தலா
கோவை: முதல்வர் , துணை முதல்வர் கோவை வரும் போது மனித வெடி குண்டாக வருவேன் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து மிரட்டல் விடுத்த பெண்ணை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை செட்டிபாளையம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா (47). இவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் அழைத்துள்ளார். போலீசார் என்னவோ ஏதோ என்று எடுத்து கேட்டால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கோவை வரும் போது மனித வெடிகுண்டாக நான் வருவேன்" என்று அசால்ட்டாக மிரட்டியுள்ளார் சகுந்தலா.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை ஆய்வு செய்துள்ளனர். அது ஒரு செல்போன் எண் என தெரியவந்தது. அதே எண்ணுக்கு திரும்ப அழைத்துள்ளனர். அதற்குள்ளாக சகுந்தலா தனது சிம் கார்டை கழற்றி வீசி எறிந்துவிட்டார்.
ஆனால், இப்போதெல்லாம் சிம் கார்டு வாங்க ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருப்பதை அவர் மறந்துவிட்டார் போல. எளிதாக, அந்த நம்பரை வைத்து சகுந்தலாவின் ஜாதகத்தையே கண்டுபிடித்துவிட்டனர் போலீசார்.
இப்போது போலீசின் பிடியில் சகுந்தலா கம்பி எண்ணுகிறார். எதற்காக அவர் இப்படி மிரட்டல் விடுத்தார் என்பது பற்றி போலீசார் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள்.
கடந்த 1990 முதல் 97 வரை இவர் அதிமுக மகளிர் அணியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பவது குறிப்பிடத்தக்கது.