நண்பருடன் "எஸ்கேப்" ஆன மனைவி... போதையில் மின்கம்பத்தில் ஏறிய கணவர்... 2 குழந்தைகளின் கதி?
சூலூர் : கோவை மாவட்டம் சூலூர் அருகே மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாக வடமாநில இளைஞர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மனைவியை பிரிந்த அந்த நபர் குடிபோதையில் மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மின்வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் வடமாநில இளைஞர் உயிர் காப்பற்றப்பட்டது.
வேலைக்கு வர மறுத்த ஜார்க்கண்ட் பெண் மீது கொடூர தாக்குதல்.. கோவை மில் மேனேஜர் உள்பட இருவர் கைது
வேறு ஒருவருடன் பழக்கம்
கோவை மாவட்டம் சூலூர் அருகே ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் வடமாநிலத் தொழிலாளி ஒருவர் அங்கே கூலி வேலை செய்து வருகிறார். அவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மனைவிக்கும் அதே பகுதியில் வசிக்கும் இன்னொருவருக்கும் திருமண பந்தத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதை பலமுறை கணவர் கண்டித்தும் மனைவி கண்டு கொள்ளாமல் இருந்ததால் குடிபோதைக்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபடும் இவரை பார்த்து, ஒரு கட்டத்தில் அந்த நபருடன் சென்றுவிட்டதாக தெரிகிறது.
மின்கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சி
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வடமாநில இளைஞர் திடீரென தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். 2 குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் ஊஞ்சப்பாளையத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது ஏறிவிட்டார். இதை அங்கு நடைபயிற்சியில் இருந்த கணியூர் ஊராட்சி தலைவர் வேலுசாமி மற்றும் சின்னச்சாமி ஆகியோர் உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனாலும் வடமாநில இளைஞர் மின்கம்பத்தின் உச்சிக்கே சென்று மின்கம்பிகளுக்கு இடையில் அமர்ந்து கொண்டார்.
பாஷை தெரியாமல் பிரச்சனை
அங்கு கூடிய பொதுமக்கள் அவரை கீழே வருமாறு கூறினர். ஆனால் அவருக்கு தமிழ் தெரியாது, காப்பற்ற நினைத்தவர்களுக்கு இந்தி தெரியாது என்பதால், சுவற்றில் ஒட்டிக்கொண்ட நத்தை போல அப்படியே அமர்ந்திருந்தார் வடமாநிலத் தொழிலாளி. பின்னர் இந்தி பேசத் தெரிந்த ஒருவர் அவசரமாக வரவழைக்கப்பட்டார். அவர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, 2 குழந்தைகளுடன் என்னை தவிக்கவிட்டு மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாகவும், தான் உயிர் வாழ விரும்பவில்லை எனவும் கூறினார்.
மனைவி பிரிந்துவிட்டதாக வேதனை
எனவே மனைவியை மீட்டுத் தந்தால் கீழே இறங்கி வருவதாக கூறினார். மேலும் 2 குழந்தைகளை தனி ஒருவனாக பராமரிப்பது சிரமம் என்றும் கூறியுள்ளார். பின்னர் ஒருவழியாக சமாதானம் பேசப்பட்டு அவர் கீழே இறக்கப்பட்டார். இதுஒருபுறம் இருக்க அந்த நபரை பற்றி தெரிவித்த சிலர், அவர் அடிக்கடி தனது மனைவியை குடிபோதையில் அடித்து வந்ததை பார்த்ததாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக கருமத்தம்பட்டி காவல்துறை உதவி ஆய்வாளர் மூர்த்தி விசாரணை மேற்கொண்டார்.