பலாத்காரம் செய்து கல்லூரி மாணவி கொடூரக் கொலை.. கோவை அருகே பெரும் பரபரப்பு
கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில், அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கொடூரத்தை தொடர்ந்து, கோவை துடியலூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி மாணவியை கழுத்தறுத்து கொலை செய்து, சடலம் சாலையோரம் வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கோவை அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரை நேற்று முதல் காணவில்லை என அவரது பெற்றோர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் இளம்பெண் ஒருவர் பொள்ளாச்சி- தாராபுரம் சாலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில், காணாமல் போன கல்லூரி மாணவி என உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவியை கழுத்தை அறுத்து மர்ம நபர் கொலை செய்துள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இளம்பெண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்த நபர்களை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.