கொஞ்சம் பொறுங்கள்.. ரேஷன் கடைகள் எல்லாம் மாடர்ன் கடைகளாக மாறும்..! அடித்து சொல்லும் ராதாகிருஷ்ணன்
கோவை: உணவு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கோவையில் பல்வேறு ரேஷன் கடைகளில் ஆய்வுகளை மேற்கொண்டார்.
கோவையில் பல்வேறு இடங்களில் கூட்டுறவுத் துறை உணவு வழங்கல் துறை சார்பில் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வுகளை மேற்கொண்டார்.
பீளமேடு பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பொருட்களின் தரத்தை அவர் ஆய்வு செய்தார்,
கூடாரம் காலி.. எதிர்க்கட்சியே இல்லாத நிலை உருவாகும்.. அதிமுகவை சீண்டிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
ஆய்வு
அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். அவரிடம் பொதுமக்கள் சில குறைகளைத் தெரிவித்தனர். முக்கியமாக பயோமெட்ரிக் கருவி அடிக்கடி வேலை செய்வதில்லை என்றும் இதனால் வயதானவர்கள் உட்பட பலருக்கும் பொருள்கள் வாங்கச் சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர். அவர்களிடம் இதை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
ரேஷன் கடைகள்
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் 2.21 கோடி ரேஷன் அட்டைகள் உள்ள நிலையில், முதல்வரின் உத்தரவின் பேரில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். மேலும் இரவு நேரத்தில் கேரள எல்லை சோதனைச் சாவடிகளை ஆய்வுப் பணிகளைத் தீவிரப்படுத்த உள்ளோம். தமிழகத்தில் 34,777 நியாயவிலைக் கடைகள் உள்ளது. கோவையில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு ஆய்வு மேற்கொண்டதில் பொதுமக்கள் பலரும் பயோமெட்ரிக் முறையில் சில பிரச்சினைகள் உள்ளதாகத் தெரிவித்தனர்.
பழைய அரிசி
சில நேரங்களில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே நியாயவிலைக் கடைகளில் விற்பனை ஆகாத பழைய அரிசி போன்றவற்றைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாமல் குடோனுக்கு அனுப்புமாறு பணியாளர்களிடம் கூறி உள்ளோம். மேலும் பல்வேறு இடங்களில் மாதிரி கடைகள் உருவாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மார்டன் கடைகள்
நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்காத அட்டையாவார்களைக் கண்டறிந்து அவர்களை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்பொழுது உள்ள ரேஷன் கடைகளைத் தரம் உயர்த்தி மார்டன் கடைகளாக மாற்று நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு முதல்வர் ஒப்புதலுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் அமுதம் காமதேனு கடைகளைத் தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
கொள்முதல்
விவசாயத்தைப் பொருத்தவரை இந்த ஆண்டு செப்டம்பர் முதலிலேயே கொள்முதல் செய்வதற்குப் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுத உள்ளார். அதேசமயம் நாங்களும் எங்களைத் தயார் படுத்திக் கொண்டுள்ளோம். மேலும் நமது மாநிலத்தில் வழங்கப்படக் கூடிய அரிசி வேறு மாநிலத்திற்குச் சென்று பாலிஷ் செய்து வேறு மாநிலங்களில் விற்பனை செய்வதைத் தடுக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பறிமுதல்
இது தொடர்பாக 2853 புகார்கள் வந்துள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை 901 வாகனங்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காகத் தமிழகத்தில் 41 எல்லை சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. தரமான பொருட்கள் மட்டுமல்லாமல் அதன் விலைகளையும் கண்காணித்து வருகிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.