ஜாலி பண்ணனுமா வாங்க.. கூப்பிட்ட லாட்ஜ்.. பூட்டு போட்டு ஜோலியை முடித்த அதிகாரிகள்!
கோவையில் சர்ச்சைக்குரிய லாட்ஜுக்கு சீல் வைக்கப்பட்டது
Recommended Video
கோவை: ஜாலி பண்ணனுமா வாங்க.. வாங்க.. என்று கூவி கூவி அழைத்து விளம்பரம் செய்த கோவை தனியார் லாட்ஜுக்கு அதிகாரிகள் சீல் வைத்துவிட்டனர்.
நவ இந்தியா பகுதியில்தான் இந்த சர்ச்சைக்குரிய லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. அதன் பெயர் "ஓயோ சில்வர் லாட்ஜ்" என்பதாகும். "கல்யாணம் ஆகாமல் ஆண், பெண் இங்கு தங்கலாம், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்" என்று இப்படி பகிரங்கமாகவே இணையத்தில் விளம்பரம் செய்திருந்தது இந்த லாட்ஜ்.
இந்த அறிவிப்பினால், எந்நேரமும் இளசுகள் கூட்டம் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் கொதித்து போய்விட்டனர். இப்படிஒரு துணிச்சலான விளம்பரம் தந்தது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
"இந்த அறிவிப்பின் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கும் சூழல் உள்ளது. பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடந்ததற்கு முக்கிய காரணமே அனுமதி இல்லாத பண்ணை வீடுகள் தான்.
அதே போல் கோவையிலும் தொடராமல் தடுக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கலெக்டரை பார்த்து நேற்று முன்தினம் ஒரு புகார் மனுவையும் அளித்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட லாட்ஜ் குறித்து ஆய்வு செய்யும்படி மாவட்ட ஆட்சியர் காவல்துறையினரையும், வருவாய்துறையினரையும் கேட்டுக் கொண்டார். அதன்படியே இவர்கள் ஆய்வு செய்து, கலெக்டரிடம் அறிக்கையும் அளித்தனர். அந்த அறிக்கையின்படி, சர்ச்சைக்குரிய லாட்ஜ்-க்கு சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து, தெற்கு வட்டாட்சியர் தேவனாதன், சீல் வைத்தார்.