வனத்தில் கொசுக்கள்... ஊருக்குள் யானைகள்..திமுக நிர்வாகியின் அரிய கண்டுபிடிப்பு
Recommended Video
கோவை: வனத்தில் கொசுக்கள் பெருகிவிட்டதால் யானைகள் ஊருக்குள் வருவதாக அரிய காரணத்தை கண்டுபிடித்துள்ளார் கோவை மாவட்ட திமுக நிர்வாகி சி.ஆர்.ராமச்சந்திரன்.
கோவை திமுக வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் முன்னாள் எம்.எல்.ஏ.ராமச்சந்திரன். இவர் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க கோவை மாவட்ட தலைவராகவும் இருக்கிறார். முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவராகவும் இருந்திருக்கிறார். இவர் தான் யானைகள் ஊருக்குள் வருவதற்கான அரிய காரணத்தை கண்டுபிடித்து விநோத விளக்கத்தை அளித்துள்ளார்.
செங்கல் சூளைகளுக்காக யானைவழித்தடங்களை மறித்து மண் வெட்டப்படுவதாகவும், நீர் நிலைகளில் வரைமுறையின்றி மண் அள்ளப்படுவதாகவும் நிண்ட காலமாக புகார் இருந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேச சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தரப்பில் நேற்று கோவை தடாகத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் பேசிய ராமச்சந்திரன், விறகுக்காக மலையடிவாரத்தில் இப்போது யாரும் மரம் வெட்ட செல்வதில்லை என்றும், அதனால் செடி,கொடிகள் முளைத்து புதர் மண்டுவதால் வனப்பகுதியில் கொசுக்கள் பெருகிவிட்டதாக தெரிவித்தார். அவ்வாறு கொசுக்கள் அதிகமானதன் காரணமாக யானைகள் அங்கிருந்து வெளியேறுவதாக கூறினார்.
திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரனின் பேச்சைக் கேட்டு, கூட்டத்தை ஏற்பாடு செய்த அதிகாரிகளுக்கு தலைசுற்றல் ஏற்படாத குறைதான். இதேபோன்ற கருத்தை கூட்டத்தில் பங்கேற்ற செங்கல் சூளை அதிபர்கள் பலரும் முன்வைக்க ஆளைவிட்டால் போதும் என்கிற வகையில் கூட்டத்தை முடித்துக்கொண்டு அதிகாரிகள் பறந்தனர்.