2 வீட்டுமனைகள், கார், பைக் என பரிசு மழை... கோவையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்
கோவை: கோவை எல்.என்.டி சாலையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்து முடிந்தது.
கோவை செட்டிபாளையம் பகுதியில், இரண்டாவது ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின் காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன.
740 காளைகள், 1,700 காளையர்கள் போட்டியில் பங்கேற்றன. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் அமைச்சர் வேலுமணி மற்றும் விஜயபாஸ்கரின் காளைகளும் பங்கேற்றுள்ளன. மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு காளைகளை அடக்க முயன்றனர்.
சில காளைகள் காளையர்கள் மிரட்டி விட்டு சென்றது. வீரத்தை வெளிப்படுத்திய காளையர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வாரி வழங்கப்பட்டன. அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை ஸ்கூட்டியை தட்டிச் சென்றது. மேலும் 13 மாடுகளை பிடித்து சிறந்த வீரராக தேர்வான மதுரையை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு 2 வீட்டுமனைகள், கார், இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியை காண, ஏராளமானோர் குவிந்திருந்தனர். இதனையொட்டி, சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.