காரின் பின்சீட்டில்.. மாலையும் கழுத்துமாக.. எங்க போறீங்க.. தடுத்த போலீஸ்.. திருதிரு தருணம்!
புதுமண தம்பதிக்கு கோவை போலீசார் விழிப்புணர்வு அளித்தனர்
கோவை: அப்பதான் கல்யாணம் முடிந்திருந்தது.. மாலையும் கழுத்துமாக காரின் பின்சீட்டில் புதுமண தம்பதி உட்கார்ந்திருந்தனர்.. அந்த காரை நிறுத்தி "எங்கே மாஸ்க்?" என்று போலீசார் கேட்கவும் அந்த ஜோடி திருதிருவென விழித்தது.. இப்படி ஒரு சம்பவம் கோவை மாவட்டம் சூலூர் அருகே நடந்துள்ளது!
Recommended Video
தற்போது நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது.. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் போலீசாரும் பொதுமக்கள் வெளிநடமாட்டம் இருந்தால் அவர்களை எச்சரித்து வருகின்றனர்.. இதனால் இவர்களது சேவையை அளப்பரியதாக உருவெடுத்துள்ளது.
இளைஞர்கள்
யாரெல்லாம் தேவையில்லாமல் வெளியே வருகிறார்களே அவர்கள் எல்லாருமே எச்சரித்து வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.. அபாயத்தை உணராமல் பைக்கில் சுற்றும் இளைஞர்களுக்கு ஆங்காங்கே போலீசார் லத்தியை எடுத்து சுழட்ட வேண்டி உள்ளது.. சிலர் மீது கேஸ் புக் பண்ண வேண்டி உள்ளது.
வழக்கு பதிவு
இப்படி எந்நேரமும் விழிப்புணர்வுடன், தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. வெளியே வருபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டை விட்டு தேவையின்றி சுற்றியவர்களுக்கு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் துறையினரின் நூதன தண்டனை வழங்கினர்.
நடமாட்டம்
அப்படித்தான் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்... அந்த சமயம் தேவையே இல்லாமல் ஒருசிலர் நடமாடி கொண்டிருந்தனர். அவர்களை கூப்பிட்டு இங்கே ஏன் சுத்தறீங்க? என்று கேட்டு, கொரோனா வைரஸ் ஆபத்தை பற்றி எடுத்து சொல்லி அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அவிநாசி
இந்த சமயத்தில்தான் கார் ஒன்று வந்தது.. சூலூரில் சில மணி நேரத்துக்கு முன்புதான் கல்யாணம் செய்து கொண்ட புதுமண தம்பதியினர் அந்த காரில் இருந்தனர்.. அவிநாசி நோக்கி கருமத்தம்பட்டி வழியாக சென்று கொண்டிருந்தனர்.. இந்த காரினை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளே பார்த்தனர்.. அப்போது காரின் பின்சீட்டில் அந்த தம்பதிகள் உட்கார்ந்திருந்தனர்.. பட்டுப்புடவை, பட்டுவேட்டியில் கழுத்தில் மாலையுடன் இருந்தது அந்த ஜோடி.. ஆனால் 2 பேருமே மாஸ்க் போடவில்லை.
வைரஸ் பரவல்
இதனால் போலீசார் ஏன் மாஸ்க் போடலை என்று அவர்களிடம் கேள்வி எழுப்பினர்.. இப்படி காரை நிறுத்தி கேட்பார்கள் என்று அவர்களும் எதிர்பார்க்கவில்லை.. தொடர்ந்து, கொரோனா வைரஸ் என்றால் என்ன, அதன் ஆபத்து எப்படி இருக்கும்.. எப்படி அந்த வைரஸ் பரவுகிறது என்று அந்த மணமக்களுக்கு போலீசார் எடுத்து சொன்னார்கள்.. பிறகு 2 பேருக்கும் மாஸ்க் எடுத்து தந்து அணிய சொல்லி, அதன்பிறகே அவர்களை வழியனுப்பி வைத்தனர்.. போலீசாரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடம் பாராட்டை பெற்று வருகிறது.