பாஜக மூத்த தலைவர்... சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு... கொரோனா தொற்று உறுதி!!
கோயம்புத்தூர்: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருக்கும் தஹ்னியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதை அவரே தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
நாடு முழுவதும் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என்று கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று முன்தினம் துவங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த 25 எம்பிக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. கொரோனா தொற்றுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
தமிழகத்திலும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவரே தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்து இருக்கிறார். இவருக்கு வயது 63. திருப்பூரில் வசித்து வருகிறார்.
தனது பதில், ''நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். எனது கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியானது. அதில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன். உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்களால் மிக விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புவேன். நான் விரைவில் குணமடைய வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் அருகே இருக்கும் கோவிலம்பாளையத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஒரு வாரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.