கொரோனாவை விட ரொம்ப மோசமா இருக்கே இந்த பாஜக அரசு.. போட்டு தாக்கிய சிபிஎம் பாலகிருஷ்ணன்!
பாஜக செயல்பாடு மோசமாக உள்ளதாக கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
கோவை: கொரோனாவை விட ரொம்ப மோசமான விளைவை இந்த பாஜக அரசு ஏற்படுத்தி வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அத்துடன் விஜய் என்ன தீவிரவாதியா என்ற கேள்வியை கேட்டதுடன், ராஜேந்திர பாலாஜி என்ன அதிமுக அமைச்சரா? இல்லை, ஆர்எஸ்எஸ் அமைச்சரா? என்று ஒட்டுமொத்த விவகாரத்தையும் ஒரே பேட்டியில் கொண்டுவந்து காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது, தமிழகத்தில் நிலவும் பல்வேறு அரசியல் மற்றும் பரபரப்பு செய்திகள் குறித்து பேசினார். அவர் சொன்னதாவது:
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது... ஆனால் இங்கே பாஜக அரசு அந்த கொரோனா வைரஸை விட ரொம்ப மோசமா இருக்கே.. அந்த வைரஸை விட மோசமான விளைவுகளை தந்து மக்களை வாட்டி வதைக்கிறது.
செருப்பை கழட்ட சொன்ன சிறுவனை சிரித்தபடி வரவேற்ற அமைச்சர்.. குடும்பத்தாரிடம் வருத்தம்.. புகார் வாபஸ்
தீவிரவாதியா?
பட்ஜெட்டில் பலனில்லாத பல அறிவிப்புகள் உள்ளன.. அதை கண்டித்து வருகிற 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்" என்றார். இதையடுத்து விஜய் வீட்டில் நடந்த ரெய்டு பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு "ஷூட்டிங் நடக்கிற இடத்திற்கே சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.. அந்த அளவுக்கு விஜய் ஒன்றும் தீவிரவாதி இல்லை.. பல படங்களில் அவர் பாஜக அரசை விமர்சித்துள்ளார்.. அந்த காரணத்திற்காகத்தான் இந்த வருமான வரித்துறை சோதனை இருக்கலாம்" என்று பாலகிருஷ்ணன் பதிலளித்தார்.
அதிமுக அமைச்சரா?
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பழங்குடியின சிறுவனை செருப்பு கழட்ட வைத்த விவகாரம் குறித்த கேள்விக்கு, "அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.. போலீசார் கட்டாயம் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து மதவெறி கருத்துகளை பரப்பி வந்து கொண்டிருக்கிறார்.. அவர் என்ன அதிமுக அமைச்சரா? இல்லை, ஆர்.எஸ்.எஸ் அமைச்சரா? என தெரியவில்லை. அவர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
ராஜேந்திர பாலாஜி
முன்னதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையிலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்து விமர்சித்திருந்தார். "அமைச்சர் தொடர்ந்து வரம்பு மீறி பேசி வருகிறார். மதவெறிக் கலகத்தை தூண்டும் வகையில் "இந்து பயங்கரவாதம் உருவாகும்" என மதச்சிறுபான்மை மக்களை மிரட்டியுள்ளார்.
உறுதிமொழி
நாடு முழுவதும் கும்பல் வன்முறையில் ஈடுபட்டு வரும் மதவெறியர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.. மதவெறி சார்ந்து பேசியதன் மூலம் அரசியல் சட்டத்தின்படி எடுத்துக் கொண்ட உறுதிமொழி மற்றும் ரகசிய காப்புப் பிரமாணத்தை அப்பட்டமாக மீறியுள்ளார். ரகசிய காப்பு உறுதிமொழியை மீறிய அவரை அமைச்சரவையிலிருந்து உடனடியாக விலக்க வேண்டும்" என்று காட்டமாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.