யாரு நீங்க.. "அவர்" அனுப்பிய ஆளா.. அதிரடியாக கேட்ட ஸ்டாலின்.. வெளியேற்றப்பட்ட பெண்.. கோவை பரபரப்பு
கோவை கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது
கோவை: "திமுக கட்சியை மாட்டிக் கொண்டு, எதுக்காக கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள்" என்று மு.க.ஸ்டாலினிடம் பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
கோவை, தொண்டாமுத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்தி வருகிறார்.. வழக்கம்போலவே இந்த கூட்டத்திலும் நிகழ்ச்சி துவங்கியதும், அதில் பங்கேற்றவர்களின் கருத்துகளை ஸ்டாலின் கேட்டார்.
அப்போது ஒரு பெண் எழுந்து, "திமுக கட்சியை மாட்டி கொண்டு, எதுக்காக கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்... அதற்கு "மேடம் .. மேடம் யார் நீங்க.. அமைச்சர் வேலுமணி அனுப்பிய ஆள்தானே. நீங்க வெளியே போங்க " என்று ஸ்டாலின் கூறியதால், கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
அப்போது அந்த பெண், "இதுவரை திமுக எதையுமே செய்யவில்லை... அப்படி இருக்கும்போது இந்த மாதிரி கிராம சபை கூட்டங்களை நடத்துவது ஏன்" என்று சத்தம் போட்டுக் கொண்டே வெளியேறினார்..
இதற்கு பிறகு, ஸ்டாலின் பேசும்போது, "திமுக கட்டுப்பாடு உள்ள இயக்கம்... வேலுமணி அவர்களே, இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள்... இது போன்று நாங்கள் செய்தால், நீங்கள் மட்டுமல்ல முதல்வரே கூட்டம் நடத்த முடியாது... இது தான் மரியாதை. உங்களுக்கு தைரியம் இல்லை... திமுக தொப்பியை மாட்டி கொண்டு, தைரியம் இருந்தால், அதிமுக என்று சொல்லி இந்த கூட்டத்தில் உட்கார்ந்திருக்க வேண்டும்... இந்த கூட்டத்தை தடுக்க வேலுமணி முயற்சி செய்வது நேத்தே எனக்கு தெரியும்... ஒரு கூட்டத்தை தடுக்க நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால், எந்த கூட்டத்தையும் நடத்த விட மாட்டோம்" என்றார்.
இதனிடையே, கூட்டத்தில் இருந்து பத்திரமாக அழைத்து செல்லப்பட்ட அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.. ஸ்டாலினை எதிர்த்து கேள்வி கேட்ட அந்த பெண்ணின் பெயர் பூங்கொடி என்பது தெரியவந்துள்ளது.