கோவை: தலித் என்பதால் அலுவலகத்தில் பெயரை எழுதவிடாமல் தடுக்கிறார்கள்-பெண் ஊராட்சி தலைவர் பகீர் புகார்
கோவை: கோவை அருகே தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்தால் அலுவலக பலகைகளில் தமது பெயரை எழுதவிடாமல் தடுப்பதாக பெண் ஊராட்சி தலைவர் சரிதா அதிர்ச்சி புகாரை கொடுத்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சுல்தான் பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார் சரிதா. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் சரிதா ஒரு மனுவை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எங்கள் பகுதியில் வசித்து வரும் உசிலைமணி (௭) பாலசுப்பிரமணியம் என்பவர், ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்து பொதுமக்களுக்கு பணி செய்ய விடாமல், தாழ்த்தப்பட்டவர் என்று தகாத வார்த்தைகளால் திட்டி வருகிறார். மேலும், ஊராட்சி எல்லை தகவல் பலகையில் மற்றும் அலுவலக கட்டிடத்தில் எனது பெயரை எழுத விடாமல் தடுத்து வருகிறார்.
லாக்டவுன் நாளில் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று திட்டியும், அலுவலகத்தில் உட்காரவிடாமல் மிரட்டியும் வருகிறார். கடந்த 19ம் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது அலுவலகத்தில் நுழைந்த பாலசுப்பிரமணியம், ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இவ்வாறு அந்த மனுவில் சரிதா கூறியுள்ளார்.
அண்மையில்தான் திருவள்ளூர் அருகே ஆத்துப்பாக்கத்தில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றுவதற்கு பட்டியலின ஊராட்சி தலைவர் அமிர்தத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபமாக வெடித்தது. இந்த பிரச்சனையில் ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அமிர்தமே மீண்டும் கொடியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிரட்டுவோர் மீது நடவடிக்கை தேவை: ஸ்டாலின்
இதனிடையே சரிதாவின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:
கோவை மாவட்டம் ஜே. கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. கே.சரிதா சாதிரீதியாக அவமானப்படுத்தப்பட்டும், கொலை மிரட்டலுக்கும் உள்ளாகி இருக்கிறார். தன்னை அவமானப்படுத்துபவர்கள் யார் என்று குறிப்பிட்டே கோவை மாவட்ட காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளார்.
ஊராட்சி மன்றத் தலைவரது உயிருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா? சரிதாவுக்கு சட்டப்பாதுகாப்பு தர வேண்டும். அவரை மிரட்டுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்! இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.