காற்றும் குறைந்தது காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்தது.. அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் மக்கள் அவதி
கோவை: காற்றின் வேகம் குறைந்துள்ளதை அடுத்து கோவை மண்டலத்தில் காற்றாலை மூலம் செய்யப்படும் மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனால் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகியவற்றில் காற்றாலை மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கண்ட மாவட்டங்களில் சுமார் 9,400 காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலமாக சராசரியாக தினமும் 10, 700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காற்று வீச்சு அதிகமாக இருக்கும் என்பதால் மின் உற்பத்தியும் அதிகமாக இருக்கும். அப்போது காற்றாலையில் இருந்து கிடைக்கும் மின்சாரம் மத்திய தொகுப்புக்கு அனுப்பப்பட்டு, பின் பிரித்து வழங்கப்படும்.
காற்றாலை மூலம் அதிகளவு மின் உற்பத்தி இருக்கும்போது மின்வெட்டு பிரச்னையும் இருக்காது. ஆனால் தற்போது காற்றின் வேகம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. அடிக்கடி பூஜ்ஜியம் என்ற நிலைக்கு காற்றாலை மின் உற்பத்தி செல்கிறது. இதனால் தொழில் நகரமான கோவை மண்டலத்தில் மின்வெட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேவையான அளவிற்கு மின்வினியோகம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவை மண்டலத்தில் அதிகளவில் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளன, எனவே இங்கு தின மின் தேவை 2,400 மெகாவாட்டாக உள்ளது. இதில் காற்றாலை மூலம் மட்டுமே 1,250 மெகாவாட் பெறப்படுகிறது.
மக்களே ஹேப்பி நியூஸ்.. காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!
தற்போது காற்றின் வேகம் குறைந்துள்ளதால், மின்உற்பத்தி அடியோடு குறைந்துள்ளது. இதனால் கோவையின் பல பகுதிகளில் அவ்வப்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது, இதனால், சிறு,குறு தொழிலாளர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். தங்களது தொழில் பாதிக்கப்படுவதாக வர்த்தக நிறுவனங்கள் கூறியுள்ளன.
கோடை காலத்தில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். அடுத்த மாதம் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் அப்படி அதிகரிக்கும்பட்சத்தில் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.