காங்கிரசுடன் திமுக கூட்டணி வைத்திருப்பது வெட்கக்கேடானது… முதல்வர் கடும் விமர்சனம்
கோவை: இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைத்திருப்பது வெட்கக்கேடானது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்பதால் கூட்டணி குறித்து அவசரப்படவில்லை என்றார்.
கூட்டணி அமைத்த பின்னர், அந்த கூட்டணி வலிமை பெற வேண்டும், ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதாகவும் கூறினார்.
ஜனநாயக முறைப்படி கோரிக்கைகளை முன்வைத்து அதற்காக கே.சி.பழனிசாமி என்னை சந்தித்தார் என்றும் விளக்கமளித்தார்.
12 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த திமுகவினர் என்ன திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தனர் என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்திற்கு எத்தனை முறை பிரதமர் வந்து சென்றுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல நலத்திட்டங்களை தங்களது திருக்கரங்களால் திறந்து வைத்துள்ளார். இதனை பொறுக்கமுடியாமல் ஆத்திரத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன என்றும் தெரிவித்தார்.