நட்ட நடு சாலையில் பிரசாரம்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிடாததால் வாக்குவாதம்.. பேச்சை பாதியில் முடித்த வைகோ
பழனி: பழனியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது போக்குவரத்து பாதிப்பில் சிக்கிய பொதுமக்கள் தொடர்ந்து ஹாரன் அடித்ததால் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவகாரம் பெரிதாவதை உணர்ந்த வைகோ பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பழனியில் திமுக வேட்பாளராக வேலுச்சாமி என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று பழனியருகே உள்ள ஆயக்குடியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பழனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆயக்குடியில் சாலைநடுவே பிரச்சார வாகனத்தை நிறுத்தி வைகோ பேசினார்.
அவர் பேசியதாவது :
நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதி மட்டுமல்ல. 22 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சிமாற்றம் ஏற்படும்.
வரவேற்பு
ஏழை எளிய பெண்கள் அடகு வைத்துள்ள 5 சவரன் வரையிலான தங்க நகைகள் வங்கியில் இருந்து மீட்கப்படும். நீட் தேர்வு ஒழிக்கப்படும், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்ததும், விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் மீண்டும் கொண்டு வரப்படும், ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற ராகுலின் அறிவிப்பும் தமிழக மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
42 ஆயிரம் கோடி
மோடி செய்திருக்கும் கொடுமை ஒன்றல்ல, இரண்டல்ல என்றும், விவசாயக் கடனை தள்ளுபடி செய்யாத மோடி கார்ப்பரேட் கம்பெனிகளின் 42 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தது வெட்கக்கேடானது.
பாதுகாப்பானவர்
தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யாத மோடி தமிழகத்திற்கு வர என்ன தகுதி உள்ளது. நாங்கள் இந்து மதத்தை மதிக்கிறோம், பழனி வரும் பக்தர்களை வரவேற்கிறோம். அதே நேரத்தில் மசூதிக்கு செல்பவர்கள், தேவாலயம் செல்பவர்கள் அனைவருக்கும் நாங்கள் பாதுகாப்பானவர்களாக இருக்கிறோம்.
பரபரப்பு
வைகோ பேச ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே பல கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கிக் கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஹாரன்களை தொடர்ந்து அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள்
இதனையடுத்து அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள் சிலர் பொதுமக்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை கவனித்த வைகோ பிரச்சனை பெரிதாவதை உணர்ந்து உடனடியாக பேச்சை நிறுத்திவிட்டு பிரச்சாரத்தை முடித்துவிட்டு திண்டுக்கல்லிற்கு புறப்பட்டு சென்றார்.
பரபரப்பு
இதனையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போக்குவரத்தை சீர்செய்தனர். வைகோ பேசிக் கொண்டிருந்தபோது பொதுமக்கள் தொடர்ந்து ஹாரன் அடித்ததும், இதனால் வைகோ தனது பேச்சை பாதியிலேயே நிறுத்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.