தோற்கடித்தாலும் பரவாயில்லை... சூலூர் மக்களுக்கு உதவுவது எனது கடமை -பொங்கலூர் பழனிசாமி
கோவை: கோவை மாவட்டம் சூலூர் தொகுதிகுட்பட்ட மக்களுக்கு அரிசி, காய்கறிகள், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வழங்கி வருகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு இவர் தோல்வியை தழுவிய நிலையிலும், அந்த தொகுதி மக்களுக்கு இந்த பேரிடரில் உதவுவது தமது கடமை எனக் கருதுகிறார்.
சூலூர் தொகுதியில் மட்டும் சுமார் 50,000 குடும்பங்களுக்கு தனது சொந்த நிதியில் நிவாரண பொருட்களை அளிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
கோவை திமுக
கோவை திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக திகழும் பொங்கலூர் பழனிசாமி ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் இருந்தவர். இந்நிலையில் திமுக சொத்துபாதுகாப்புக் குழுவுக்கு தலைமை இவரை இடம்பெயர வைத்ததால் மாவட்ட அரசியலில் புதியவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கினார். இருப்பினும் தன்னை நாடி வரும் ஆதரவாளர்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
இடைத்தேர்தலில் தோல்வி
இந்நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க முடிவெடுத்த இவர் இதற்காக சூலூர் பகுதியை தேர்வு செய்தார். சூலூர் தொகுதி அதிக கிராமங்களை உள்ளடக்கிய பகுதி என்பதால் ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு கிராமங்கள் தோறும் டோர் பை டோர் அரிசி, காய்கறிகள், மளிகைப்பொருட்களை வழங்கி வருகிறார்.
வியப்பு
கட்சியில் மாவட்ட அளவில் எந்த பதவியிலும் இல்லாததால் பொங்கலூர் பழனிசாமி மீண்டும் களத்திற்கு வரமாட்டார் என கோவை திமுகவில் உள்ள அவரது எதிர்கோஷ்டியினர் நினைத்திருந்தனர். இந்நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திமுகவினர் பாகுபாடின்றி உதவவேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தியதன் அடிப்படையில் உடனடியாக களத்தில் இறங்கிய இவர் நிவாரண பணிகளை சூலூர் தொகுதியில் முழுவீச்சில் முன்னெடுத்தார். மேலும், தனது பொறியியல் கல்லூரியை கொரோனா வார்டாக பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகத்திற்கு கடந்த மாதமே கடிதமும் கொடுத்திருக்கிறார்.
ஒரு லட்சம் கிலோ அரிசி
மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஒரு லட்சம் கிலோ அரிசியை கொள்முதல் செய்த பொங்கலூர் பழனிசாமி, அதை தனது பொறியியல் கல்லூரியில் வைத்து குடும்பத்திற்கு 5 கிலோ வீதம் தனி தனி பைகளாக பேக்கேஜிங் செய்துள்ளார். தனது கல்லூரி ஊழியர்களை கொண்டும், உள்ளூர் கட்சிக்காரர்களை கொண்டும் வீடு தோறும் சென்று இந்த அரிசி பைகளை வழங்கி வருகிறார்.