திமுக ஒரு கட்சியே இல்லை... குடும்பத்திற்காக உருவாக்கப்பட்ட கம்பெனி.. முதல்வர் பேச்சு
சூலூர்: திமுக குடும்பத்திற்காக உருவாக்கப்பட்ட இயக்கம், அது ஒரு கட்சி இல்லை கம்பெனி என்றும் முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஆட்சியை தக்கவைக்க, அதிமுக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதே நேரம், ஆட்சியை கலைக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 22 தொகுதிகளின் வெற்றியை வைத்து, தமிழகத்தின் அடுத்தக்கட்ட நகர்வை தீர்மாணிக்கும் என்பதால், மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளாகி உள்ளது.
இந்தநிலையில், சூலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் நலன் காக்க உருவாக்கப்பட்ட இயக்கம் என்றார்.
திமுகவும் அமமுகவும் கூட்டு என்பதை தங்க தமிழ்ச்செல்வன் வெளியே போட்டு உடைத்துவிட்டார் என்று கூறிய அவர், 18 எம்எல்ஏக்கள் டிஸ்மிஸ் தொடர்பாக, ஸ்டாலின் வழக்கு போட்ட போது, அவர்களுடன் இணைந்து வெற்றிவேலும், வழக்கு போட்டார் என்பதை நினைத்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், சிறு, குறு விசைத்தறியாளர்களின் ரூ.65 கோடி வங்கி மூலதனக் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வீடுகட்ட வாங்கிய கடன் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.
இரண்டே கால் ஆண்டுகளில் திமுக எம்எல்ஏ-க்கள் இதுவரை தொகுதி மக்களின் எந்த கோரிக்கைக்காகவும் எங்களிடம் வந்ததில்லை என்று பேசிய முதலமைச்சர் பழனிசாமி, திமுகவுடன் ரகசிய கூட்டணி வைத்து, அதிமுக வேட்பாளரின் வெற்றியை தடுக்க வேண்டும் என தினகரன் நினைக்கிறார் எனத் தெரிவித்தார்.