பொள்ளாச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்- திமுக எம்பி கனிமொழி போலீசால் தடுத்து நிறுத்தம்
பொள்ளாசி: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தைக் கண்டித்து இன்று தடையை மீறி நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க செல்ல முயன்ற திமுக எம்.பி. கனிமொழி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனையடுத்து கனிமொழி எம்.பி மற்றும் திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
பொள்ளாச்சியில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் சில முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த அதிமுக முக்கியப் புள்ளிகளை கைது செய்ய வலியுறுத்தி இன்று கனிமொழி எம்.பி. தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்திருந்தது. ஆனால் இப்போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படும் வரை திமுகவின் நியாயம் கேட்கும் போராட்டம் ஓயாது, தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி தடையை மீறி போராட்டம் நடத்த கனிமொழி எம்.பி. சென்று கொண்டிருந்தார். ஈச்சனாரி அருகே கனிமொழி எம்.பி.யின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி பொள்ளாச்சி செல்ல அனுமதி மறுத்தனர். இதனைக் கண்டித்து சாலையில் அமர்ந்து கனிமொழி எம்பி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.
இதன்பின்னர் பொள்ளாச்சியில் தடையை மீறி போராட்டம் நடத்த கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர்.