ஸ்வீட் செல்லங்கள்.. சொல் பேச்சு கேட்டு எப்படி சமத்தா இருக்காங்க.. நாம மட்டும் ஏன் இப்படி?
கோவை: கொரோனாவைரஸ் பரவல் தற்போது கட்டுக்கடங்காமல் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. மே மாதத்தில் இது உச்சத்தை அடையும் என்று சொன்னார்கள். அதே போலவே இப்போது இந்தியாவில் பாதிப்பு கிடுகிடுவென அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் படு வேகமாக எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தலைநகர் சென்னையின் நிலை கவலை தருவதாக உள்ளது. ஆயிரத்தைத் தாண்டி போய் விட்டது பாதிப்பு. சென்னைக்கு அடுத்து திருப்பூர், கோவை ஆகியவையும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
ஆனால் சென்னையைப் போல இல்லாமல் மற்ற ஊர்களில் பாதிப்புகள் இத்தனை வேகமாக இல்லை. இந்த நேரத்தில்தான் நமக்கு சமூக விலகல் முக்கியமாக தேவைப்படுகிறது. தனித்திருத்தல் அவசியம். வீடுகளை விட்டு வெளியேறாமல் வீடுகளில் இருத்தல் அவசியம். அப்படியே அவசியத்திற்காக வெளியே வந்தாலும் கூட சமூக விலகல் மிக மிக அவசியம்.
இந்த சமூக விலகலின் முக்கியத்துவத்தை மக்கள் இன்னும் சரிவர மனதில் உள்வாங்கவில்லையோ என்ற அச்சம்தான் நமக்கு வருகிறது. இந்த நேரத்தில்தான் கோவையைச் சேர்ந்த நமது வாசகர் பிரியா அனுப்பியுள்ள இந்த ஒற்றைப் புகைப்படம் நமக்கு ஆயிரம் பாடங்களைக் கற்றுத் தருவதாக உள்ளது.
கோவையைச் சேர்ந்த பிரியாவுக்கு கோவைக்கு அருகே 15 கிலோமீட்டர் தொலைவில் ஒரு பண்ணை உள்ளது. அந்த பண்ணை வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்தப் புகைப்படத்தில் இருப்பது அவர் வளர்த்து வரும் 3 நாய்கள். அழகாக நல்ல இடைவெளி விட்டு அமைதியாக உட்கார்ந்துள்ளன 3 நாய்களும். பார்க்க வித்தியாசமாக இருக்கவே அதை புகைப்படம் எடுத்துள்ளார். இது எடுத்து 2 வருடங்களாகி விட்டது.
ஆனால் இந்தப் புகைப்படத்துக்கான அர்த்தம் இப்போதுதான் பளிச்சென அவரது மனதில் பட்டுள்ளது. இதுதான் சமூக விலகல்.. இதுதான் இப்போது நமக்குத் தேவை.. என்று உணர்ந்த அவர் உடனடியாக நமக்கு அனுப்பி வைத்தார். இதில் எப்படி அழகாக சமூக விலகலை கடைப்பிடித்து அமர்ந்துள்ளன இந்த நாய்கள்.. .நாம் மட்டும் ஏன் இதை பின்பற்றத் தயங்குகிறோம் என்ற கேள்விதான் இந்தப் படத்தைப் பார்க்கும்போது நமக்குத் தோன்றுகிறது.
ஒட்டுமொத்த தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் இந்த சமூக விலகல்தான் அவசியமாக இப்போது தேவைப்படுகிறது. அதைச் சொல்லாமல் கற்றுத் தருகின்றன இந்த 3 வாய் பேச முடியாத ஜீவன்கள். இதை நாமும் பின்பற்றுவோம். காரணம் கொரோனாவுக்கு மருந்து இல்லை. மருந்து கண்டுபிடிக்கும் வரை இப்படிப்பட்ட விலகல்கலும், தனித்திருத்தலும்தான் ஒரே தீர்வு.
தனித்திருப்போம்.. சமூக விலகலைக் கடைப்பிடிப்போம்.. சுத்தமாக இருக்க முயற்சிப்போம்.. நல்லதே நடக்கும். நம்பிக்கையுடன் நாட்களைத் தொடர்வோம்.