250 வீடுகளின் மின்சாரத்தை துண்டிக்க தடை.. நில விவகார வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி
கோவை சின்னயம்பாளையத்தில் உள்ள 250 வீடுகளின் மின்சாரத்தை துண்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோயம்புத்தூர்: கோவை சின்னயம்பாளையத்தில் உள்ள 250 வீடுகளின் மின்சாரத்தை துண்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது..
கோவை மாவட்டம் சின்னயம்பாளையத்தில் உள்ள 250 வீடுகள் தன்னுடைய நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாகவும், அவர்களை அந்த நிலத்தில் அகற்ற கோரி அந்த பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் 250 வீடுகளின் மின் விநியோகத்தை துண்டிக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சின்னயம்பாளையத்தில் உள்ள செல்வராஜ், மாரிமுத்து உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் மின்சாரத்தை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சின்னயம்பாளையத்தில் உள்ள 250 வீடுகளின் மின்சாரத்தை துண்டிக்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு குறித்து பழனிசாமி, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.