மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை வரவேற்க வேண்டும்.. அரசியலாக்க வேண்டாம்.. கடம்பூர் ராஜு
கோவை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதை வரவேற்க வேண்டும், தேவையில்லாமல் அரசியலாக்குவதா என்று செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கேட்டுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தமிழக செய்திதுறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போதுமுன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 2016 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல தொடர்ந்து மத்திய அரசிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு கொண்டு வந்துள்ளோம்.
இதை அரசியலுக்கு அப்பாற்பட்டு வரவேற்க வேண்டும், அரசு ஊழியர் போராட்டத்தை பெரும்பாலான மக்கள் எதிர்க்கின்றனர் நேற்று குடியரசு தினத்திற்கு கூட பள்ளிக்கூடத்திற்கு போகாமல் ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள், இதைக் மக்களே ஆதரிக்கவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும், அப்போது அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை திரும்ப பெறுவதற்கும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
மாணவர்களின் நலன் கருதி அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும். ட்விட்டரில் "கோ பேக் மோடி " என வருவது எல்லாம் சரியான அளவீடு கிடையாது அரசு ஊழியர் போராட்டம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பொய்யான தகவல் எதுவும் சொல்லவில்லை. தமிழர்களின் நலன் சார்ந்த விவகாரத்திற்காக பிரதமர் மோடி வந்திருக்கின்றார்.
எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக அத்தனை விதிமுறைகளையும் நிறைவேற்றி கொடுத்ததால்தான் தமிழகத்துக்கு அனுமதி கிடைத்திருக்கின்றது தமிழக முதல்வர் இன்று பிரதமரிடம் கொடுத்த கோரிக்கைகள் வெட்ட வெளிச்சமாக எப்படி தெரியும் என தெரிவித்த அவர் காவிரி விவகாரம் உட்பட தமிழர்களின் நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.