கோவை: மாட்டுக்கறி உணவு உரிமை குறித்து எழுதிய திவிக நிர்வாகி கைது
கோவை: மாட்டுக்கறி உணவு உரிமை குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் கைது செய்யப்ப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மாட்டுக்கறி உணவை சாப்பிடலாம் என பதிவிட்டாலே கைது செய்யும் நடவடிக்கைகள் வட இந்திய மாநிலங்களில் நடைபெற்று வந்தன. தற்போது தமிழகத்திலும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி நிர்மல்குமார் தமது பேஸ்புக் பக்கத்தில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களே, எங்கெங்கோ இருப்பவர்களை மாட்டுக்கறி சாப்பிட்டால் தாக்கும் உன் திமிர் கோவையில் உன் பகுதியில் இருக்கின்றோம். மாட்டுகறி அடிக்கடி சாப்பிடுவதை பதிவிடுகிறோம். மீண்டும் உனக்காக பதிவிடுகிறோம்.வா தில் இருந்தால் வா. என்றும் கடந்த 13-ம் தேதி மாட்டுக்கறி சாப்பிட்டால் அடித்து கொல்வாயா? How is it? இந்து மத வெறியர்களே? என பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக மணி என்பவர் கோவை போலீசில் புகார் தெரிவித்தார். இப்புகாரின் அடிப்படையில் நேற்று நிர்மல்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நாகை மாவட்டத்தில் மாட்டு சூப் குடித்ததற்காக ஒருவர் இந்து மக்கள் கட்சி நிர்வாகியால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.