பிஸியோ... பிஸி... டிரம்புக்கு ஜனாதிபதி விருந்து... அழைப்பை புறக்கணித்த இ.பி.எஸ்
கோவை: ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இருப்பதால் ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அளிக்கப்படும் விருந்தில் தன்னால் கலந்துகொள்ள முடியாத சூழல் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உலகத்தலைவர்களில் மிகவும் சக்திவாய்ந்தவரான டிரம்பை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியும் அதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதாசீனம் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்ய முதல்வருக்கு மனமில்லையாம்.
முதல்வர்களுக்கு அழைப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில் அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை டெல்லியில் விருந்து அளிக்கிறார். ஜனாதிபதி மாளிகையில் அளிக்கப்படும் இந்த விருந்தில் கலந்துகொள்ளுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், எதிர்க்கட்சியான காங்கிரஸில் ஆதின் ரஞ்சன் சவுத்ரிக்கும், குலாம் நபி ஆசாத்திற்கும் ராம் நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். சோனியா, ராகுல், மன்மோகன் உள்ளிட்ட மற்ற எந்த தலைவர்களுக்கும் அழைப்பு இல்லை.
விருந்து புறக்கணிப்பு
ஜனாதிபதி அழைப்பை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த விருந்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சென்னையில் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இன்று பிற்பகல் சேலம் புறப்பட்டு சென்றுவிட்டார். அப்போது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இருப்பதால் தன்னால் டிரம்புக்கு ஜனாதிபதி கொடுக்கும் விருந்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் எனக் கூறினார்.
நழுவவிட்டார்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனக்கு கிடைத்த நல்லதொரு வாய்ப்பு தவறவிடுவதாகவும், இந்த விருந்தில் அவர் பங்கேற்பது அவரது அரசியல் வாழ்க்கையில் புதிய மைல்கல்லாக இருக்கும் எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இப்படியொரு வாய்ப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நழுவவிடுகிறார் என்றால், அதன் பின்னணியில் பெரிய அரசியல் ஏதேனும் இருக்கும் என அவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஒருவேளை மத்திய அரசு தரப்பில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லையா என்ற கோணத்திலும் அவர்கள் ஐயம் எழுப்புகின்றனர்.
நலத்திட்ட உதவிகள்
இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் பேசிய போது, டிரம்பை விட அம்மா தான் தனக்கு முக்கியம் என்பதை எங்களுக்கு உணர்த்திவிட்டார் முதல்வர். அம்மாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் சேலத்தில் நடைபெறுகிறது, அதைத்தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் இருக்கின்றன. இப்படி தொடர் நிகழ்ச்சிகள் இருப்பதால் திடீரென அதை தள்ளி வைத்தாலோ, ரத்து செய்தாலோ பயனாளிகள் ஏமாற்றம் அடைவார்கள் என்பதால் சி.எம்.டெல்லி செல்லவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.