வீட்டில் தனியே இருந்த 62 வயது தனலட்சுமி.. நோட்டமிட்டு புகுந்த மர்ம ஆசாமிகள்.. கோவையில் பரிதாபம்!
கோவை: கோவையில் மூதாட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். சொத்துக்காக கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வைசியாள் வீதி கெம்பட்டடி காலனியை சேர்ந்தவர் சிவானந்தம். இவருடைய மனைவி தனலட்சுமி (62). இவர்களுக்கு ஜெயந்தி என்ற மகளும், பிரகாஷ் பாகு, ரமேஷ், மணிகண்டன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
சிவானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மணிகண்டன் தவிர பிற அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதனால் மணிகண்டனுடன் தனலட்சுமி வசித்து வந்தார்.
கொரோனா பாதித்த கண் பார்வையற்றவர்.. கணீர் குரலால் பாட்டு பாடி வார்ட்டை மகிழ்விக்கும் திருமூர்த்தி
தனலட்சுமி
மணிகண்டன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று இரவு தனலட்சுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தனலட்சுமியை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து தனலட்சுமியை கத்தியால் கழுத்து பகுதியில் குத்தியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் தனலட்சுமி
அதில் அவர் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். தனலட்சுமியை கொன்றுவிட்டு அந்த மர்ம ஆசாமிகள் அவர் அணிந்து இருந்த நகைகள் மற்றும் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, பணத்தை திருடிக் கொண்டு தப்பியுள்ளனர். பின்னர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மணிகண்டன் வீட்டில் தனது தாய் ரத்த வெள்ளத்தில் கழுத்தில் கத்தி பாய்ந்த நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
தடயவியல் நிபுணர்கள்
இதுகுறித்து பெரியகடைவீதி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தார்கள். மேலும் தடயவியல் நிபுணர்கள், கழுத்தில் உள்ள கத்தியின் பிடி, கதவு, பீரோவின் கதவு, போன்ற இடங்களில் பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தார்கள்.
பிரேத பரிசோதனை
தனலட்சுமி வீட்டில் குடியிருப்பவர்கள் மற்றும் அந்த குடியிருப்பிற்கு வந்து சென்றவர்களிடம் போலீசார் சம்பவ இடத்திலேயே கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதனை தொடர்ந்து தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கொலைக்கான காரணம் என்ன?
தனலட்சுமிக்கு ஏராளமான சொத்துக்கள் இருப்பதாக தெரிகிறது. எனவே அவர் சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது நகை, பணம் திருடும் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யபட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.