அதிமுக பெயரில் போலி இணையதளம்: முன்னாள் எம்.பி. கே.சி பழனிசாமிக்கு பிப் 7 வரை நீதிமன்ற காவல்
கோவை: அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி பழனிசாமியை பிப்ரவரி 7-ந் தேதி வரை சிறையில் அடைக்க கோவை நீதிபதி வேடியப்பன் உத்தரவிட்டார்.
அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்திருந்தார்.
பாஜகவிற்கு எதிராக பேசியதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.
ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு... தந்தை பெரியார் மிகப் பெரும் தலைவர்... ஹைகோர்ட் நீதிபதி ராஜமாணிக்கம்
வழக்குகள்
இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து 2018-இல் மார்ச் 16-ஆம் தேதி நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிமுகவின் பதவி விவகாரங்களில் கே.சி. பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். இவர் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்தார். சசிகலாவை கடுமையாக எதிர்த்தார்.
முதல்வர் மறுப்பு
இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி அவர் செய்தியாளர்களை சந்தித்த கேசி பழனிச்சாமி தான் அதிமுகவில் மீண்டும் சேர்ந்து விட்டதாக தெரிவித்தார். இவர் கூறியதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் கேசி பழனிச்சாமியை நாங்கள் கட்சியில் சேர்க்கவில்லை. அவரை மீண்டும் அதிமுகவில் சேர்த்ததாக நாங்கள் கூறினோமா என கேட்டார்.
இணையதளத்தில் இரட்டை இலை சின்னம்
இந்த நிலையில் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்ட போதிலும் இணையதளத்திலும் தான் பயன்படுத்தும் லெட்டர்பேடிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அதிமுகவை சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து கோவை லாலிரோட்டில் உள்ள பழனிச்சாமியின் வீட்டில் அதிகாலை 4 மணிக்கு அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்யப்பட்டார்.
வழக்கு பதிவு
அவர் சூலூர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சுமார் 10 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேடியப்பனின் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் கே.சி. பழனிசாமியை பிப்ரவரி 7-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி வேடியப்பன் உத்தரவிட்டார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் அவர் அக்கட்சியில் இருப்பது போல் தொடர்ந்து செயல்பட்டதாக அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி. ஆர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து உடன் இருந்த கேசி பழனிச்சாமி ஜெ. மறைந்த பிறகு ஏற்பட்ட பிளவில் ஓபிஎஸ் அணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.