காய்கறிகள், தேசியக்கொடிகளுடன் பேரணி... கோவையை அதிர வைத்த விவசாயிகள்!
கோவை: டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோவையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மோட்டார் பம்புகளுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள்போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது தோல்வியில்தான் முடிந்து வருகிறது.

தேசியக்கொடியுடன் பேரணி
விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த விவசாயிகள் இன்று தேசியக்கொடியுடன் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

காய்கறிகளுடன் பேரணி
அவினாசி சாலை தண்டுமாரியம்மன் கோவிலில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். அவர்கள் காய்கறிகள் வாழை மரங்கள், பழங்கள் மற்றும் மோட்டார் பம்பு செட்டுகளை கைகளில் ஏந்திய படி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து போராடுவோம்
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறுகையில் டிராக்டரில் வந்து போராட்டத்தில் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், வாழ்க்கையோடு ஒத்துப்போன வேளாண் கருவிகளோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். விவசாயிகளை தலை குனியவைத்து விட்டு தலை வணங்குவதாக மோடி தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குரலெழுப்ப வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராடுவோம். என்று கூறினார்.