குடையுடன் வந்த மேகம்.. இதமான காற்றோடு பெய்த சாரல்.. குளுகுளுவென மாறியது கோவை
கோவை: கேரளாவில் பெய்து வரும் தெற்மேற்கு பருவ மழை அப்படியே, எப்படி வரலாம் என காற்றென்ற குடையுடன் எட்டி பார்த்து சென்றதால், குளுகுளுவென மாறியது கோவை மாநகரம்
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நகரங்களில் மிக முக்கியமான நகரம் கோவை. பக்கத்தில் ஊட்டி இருப்பதாலும், மரங்கள் நிறைந்த ஊர் என்பதாலும் எப்போதுமே கோவை குளுகுளுவென இருந்தது ஒரு காலத்தில்...
ஆனால் நகரமயத்தால் மரங்களை வெட்டி நரகமயமாகிய கோவையில், மற்ற ஊர்களுக்கு கொஞ்சம் குறையில்லாமல் கொளுத்த ஆரம்பித்தது. இப்போதும் வெயில் அப்படித்தான் கொளுத்துகிறது.
ஆடிவரும் அரபிக் கடல் காத்து.. தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
எனினும் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.இதனால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உருவான மேகங்கள், மெல்லிய காற்றோடு கேரளாவின் அனைத்த பகுதிகளையும் குளிர வைத்து வருகின்றன. அப்படித்தான் இன்று பாலக்காட்டையும் தாண்டி. காற்று என்ற குடையுடன் கோவைக்கு ஓடி வந்தன மேகங்கள். அவை மெல்லியதாய் சாரலை வீசிச் சென்றன.
இதனால் கோவை நகரின் பல இடங்களில் குளிர்ந்த காற்று வீசுகிறது. புறநகர் பகுதிகளில் லேசான தூறல் மழையும் பெய்தது. வெயில் இல்லாமல். வெப்பம் குறைந்து குளு, குளு காலநிலை கோவையில் காணப்படுகிறது. இன்று மாலை கோவையின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையில் கோவையில் மட்டுமல்லாமல், கன்னியாக்குமரி மாவட்டத்திலும் இன்று நல்ல மழை பெய்தது. இதனால் அங்கும் இதமான சூழல் நிலவுகிறது