உங்களுக்கெல்லாம் புத்தி இல்லை.. எத்தனை பேர் சாக கிடக்கிறாங்க.. கட்சியினருக்கு எதிராக கொதித்த மக்கள்
அரசு ஆஸ்பத்திரி முன்பு அமைச்சரை வரவேற்க பட்டாசு வெடிக்கப்பட்டது.
Recommended Video
கோவை: "உங்களுக்கெல்லாம் புத்தி இல்லை.. எத்தனை பேர் சாகக்கிடக்கிறாங்க உள்ளே" என்று அமைச்சரை வரவேற்பதற்காக அரசு ஆஸ்பத்திரி அருகே பட்டாசு வெடித்தவர்களிடம் பொதுமக்கள் கொதித்து போய் கேட்டனர்.
கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆஞ்சியோகிராம் சேவை மற்றும் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் ஆகியவற்றை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று துவக்கி வைத்தார்.
இதற்காக அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த அமைச்சரை வரவேற்பதற்காக அதிமுக நிர்வாகிகள் தடபுடலாக ஏற்பாடுகளை செய்தனர். சாலையில் இருந்து ஆஸ்பத்திரி வளாகம் வரை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. பிறகு அமைச்சர் வரும்போது சரவெடி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
காதை பிளந்தது
ஆஸ்பத்திரிக்கு முன்பு இப்படி பட்டாசுகள் வெடித்து சிதறியதால், சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள், வண்டி ஓட்டிகொண்டிருந்தவர்கள் எல்லாரும் அப்படியே நின்றுவிட்டனர். பெண்கள், குழந்தைகள் எல்லாம் பட்டாசு சத்தம் காதை பிளந்ததால் ஓடிபோய் சாலை ஓரத்தில் நின்று கொண்டு காதை மூடிக் கொண்டனர். இந்த சத்தம் போதாதென்று மேளம் கொட்டப்பட்டது. சிறிது நேரத்தில் அந்த இடமே புகை மண்டலமானது. பொதுமக்கள் மூக்கையும் மூடிக்கொண்டனர்.
சாகக்கிடக்கிறாங்க
இது எல்லாவற்றிற்கும் மேலாக, ஆஸ்பத்திரிக்குள் ஒருவர் மேளம் கொட்டி அமைச்சரை வரவேற்றார். இதனால் கடுப்படைந்த மக்கள், ஆஸ்பத்திரியை சுட்டிக்காட்டி, "எத்தனை பேர் சாகக்கிடக்கிறாங்க உள்ளே.. இதெல்லாம் உங்களுக்கே தெரிய வேணாமா? உங்களுக்கெல்லாம் புத்தி இல்லையா? ஹாரன் அடிக்கிறதே இந்த இடத்துல தப்பு. பேஷன்ட்ங்க என்ன ஆவாங்க?
கேட்க மாட்டீங்களா?
இவ்வளவு போலீஸ் இங்கே இருக்கீங்களே.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா? எவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.. உங்களுக்கு பாக்கெட் மட்டும் நிறைஞ்சா போதும்.. " என்று கொதித்துபோய் கேட்டனர். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட அது வைரலாகி கொண்டிருக்கிறது.
பட்டாசு சத்தம் ஆஸ்பத்திரி முன்பு அதிக சத்தம் எழுப்பக்கூடாது என்பது எழுதப்பட்ட விதி. இருந்தாலும் அரசு விழா, முதல்வர், அமைச்சர்கள் வருகையின்போது பட்டாசு வெடிப்பது என்பது எழுதப்படாத விதியாகவே தொன்றுதொட்டு இருக்கிறது.
ஆஸ்பத்திரி முன்பு அதிக சத்தம் எழுப்பக்கூடாது என்பது எழுதப்பட்ட விதி. இருந்தாலும் அரசு விழா, முதல்வர், அமைச்சர்கள் வருகையின்போது பட்டாசு வெடிப்பது என்பது எழுதப்படாத விதியாகவே தொன்றுதொட்டு இருக்கிறது.