கடும் வறட்சி... கோவை சிந்தாமணி குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன
கோவை: கோவையில் உள்ள செல்வ சிந்தாமணி குளத்தில் திடீரென்று, ஆயிரக்கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
கோவையை அடுத்த செல்வபுரம் பகுதியில் அமைந்திருக்கிறது செல்வ சிந்தாமணி குளம். சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்தக் குளம் கோவை மாநகராட்சிப் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் மிக முக்கியமானது. கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்தக் குளத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று திடீரென்று குளத்தில் உள்ள மீன்கள் செத்து கொத்துக் கொத்தாக கரை ஒதுங்க ஆரம்பித்தன. ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து ஒதுங்கியதால், அந்தப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அவதிக்கு ஆளாகினர். வாகன ஓட்டிகள் மூக்கை பொத்தியவாறு சென்றார்.
மீன்கள் செத்து மிதப்பது இந்தக் குளத்தில் உள்ள தண்ணீரின் சுகாதாரக் கேட்டைத்தான் வெளிப்படுத்துகிறது என்று செல்வபுரம் பகுதி மக்கள் கூறுகின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து குளத்தை அழகுபடுத்துவதற்கு முன்பு இந்தக் குளத்து நீரோடு சாக்கடைக் கழிவுகளும், சாயக்கழிவுகளும் எந்தச் சூழலிலும் கலக்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் மாசுபட்டதால் தான் மீன்கள் இறக்கின்றன. எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 89 அணைகள், 14,098 ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளது. இதனால், அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்கு கூட தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
மேலும், மழை இல்லாததால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். பல கிராமங்களில் குடிக்க குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்க்க முடியாத நிலையில் உள்ளனர்.