மன நிம்மதி வேண்டும்.. கோவையில் பிச்சை எடுக்கும் வெளிநாட்டு தொழிலதிபர்!
Recommended Video
கோயமுத்தூர்: மன நிம்மதிக்காக வெளிநாட்டு தொழில் அதிபர் ஒருவர், கோவை ரயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கையெடுத்து கும்பிட்டு பிச்சை கேட்டு சுற்றித்திரிவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
பிச்சை எடுப்பதை கேவலமாக பலர் கருதுவார்கள். பிச்சை புகினும் கற்கை நன்றே என்றும் சொல்வார்கள். ஆனால் ஒரு படித்த பெரும் பணக்கார தொழிலதிபர் எல்லாத்தையும் விட்டுட்டு கோவையில் பிச்சை எடுக்க வந்திருக்கிறார்.
வாழ்க்கையில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், கடைசி காலத்தில் மன நிம்மதிக்காக பலரும் நாடும் விஷயம் ஆன்மீகம். ஆன்மீகத்தில் தங்களை ஈடுபடுத்துவதன் மூலம் மன நிம்மதி கிடைப்பதாக பலரும் நம்புகின்றனர்.
நிம்மதி தேடி
இந்தியாவிற்கு மன நிம்மதியை தேடி, ஆன்மீக பயணமா லட்சக்கணக்கான வெளிநாட்டினர் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். அந்தவகையில் கோவைக்கு மன நிம்மதி தேடி ஆன்மீக பயணம் வந்த வெளிநாட்டு தொழிலதிபரின் செயல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் கிம். பிறருக்கு சேவை செய்யும் குணம் படைத்த இவர், தனது நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவந்துள்ளார்.
ஈஷாவுக்கு போயும்
இதனிடையே மன நிம்மதிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்மீக பயணமாக கோயம்புத்தூர் வந்துள்ளார் கிம். அங்குள்ள ஈஷா யோகா மையத்தில் சேர்ந்து, தியானம், ஏழை மக்களுக்கு சேவை உள்ளிட்ட சமூக பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் எதிலும் மனநிம்மதி கிடைக்காத கிம், தற்போது மன அமைதிக்காக வித்தியாசமான முறையை கையாண்டு வருகிறார்.
பிச்சை எடுக்கிறார்
கோவை ரயில் நிலையத்திற்கு வரும், பொதுமக்களிடத்தில் வணக்கம் வைத்து, பிச்சை கேட்டு வருகிறார் கிம். அவர்கள் தரும் பணத்தை பெற்று, அதில் உணவு வாங்கி உண்டு வருகிறார். பொதுமக்களிடத்தில் யாசகம் பெற்று தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதன் மூலம் மன நிம்மதி கிடைப்பதாக கிம் தெரிவித்துள்ளார். கிம்மின் இந்த செயலை ரயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
நிம்மதி எங்கே
எங்கே நிம்மதி என்று சிவாஜி கணேசன் ஒரு படத்தில் பாடுவார்.. எத்தனை இருந்தும் என்ன பயன்.. மன நிம்மதி, மன அமைதி முக்கியம் அல்லவா.. அதைத்தான் இந்த ஸ்வீடன் தொழிலதிபர் நமக்கு சுட்டிக் காட்டுகிறார். ஆனால் பிச்சை எடுப்பதால் இவருக்கு என்ன விதமான மன அமைதி கிடைக்கும் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.