2 நாள்தான் டைம்.. ஆனால் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டு கொண்டிருக்கும் சின்னத்தம்பி!
சின்னதம்பி யானை 2 நாளில் பிடித்துவிடுவோம் என வனத்துறை தகவல்
கோவை: சின்னதம்பிக்கு இன்னும் 2 நாள்தான் டைம்... அதுக்குள்ள பிடிச்சிருவாங்களாம்!!
கோவை அருகே தடாகம் பகுதியில் 2 யானைகள் ஊருக்குள் புகுந்துவிட்டன. ஒரு பக்கம் தங்கள் விளைநிலங்களை இந்த யானைகள் அழித்தாலும், இவைகளை ஊர் மக்களுக்கு ரொம்பவும் பிடித்து போய்விட்டது.
அதனால் விநாயகா, சின்னதம்பி என்று பெயர்வைத்து அழைத்து வந்தார்கள். 6 மாத காலம் மக்களோடு மக்களாகவே இந்த யானைகள் ஒன்றிபோய்விட்டன. எனினும் வனத்துறையினர் யானைகளை பிடித்து முதுமலையில் கொண்டு போய் விட நடவடிக்கை எடுத்தனர்.
கண்கலங்கிய மக்கள்
அதற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது விநாயகா பிடிபட்டது. உடனே அதற்கு மயக்க ஊசி போட்டு லாரியில் ஏற்றி சென்றனர். அப்போது பொதுமக்கள் ரொம்பவும் கண்கலங்கி போய்விட்டார்கள். இப்போது சின்னதம்பி ஊருக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறது.
மாயமாகி விட்டது
விநாயகா எப்பவும் அமைதியான டைப் என்றால்,சின்னதம்பி கொஞ்சம் சேட்டையாம். முதலில் சின்னதம்பிக்குதான் வலை விரிக்கப்பட்டது. அதை பிடிக்க முயல்வதற்குள் டக்கென மாயமாகி விட்டது. அதனால்தான் விநாயகாவை பிடித்து கொண்டு போனார்கள். இப்போது நேற்றிலிருந்து சின்னதம்பியை கண்காணித்து வருகிறார்கள்.
ஜாலியாக சுற்றுகிறது
ஏற்கனவே விநாயகாவை விரட்டி பிடிக்கவே வனத்துறைக்கு 2 நாளாகிவிட்டதாம். தூக்கமும் சரியாக இல்லாததால் சோர்வாக இருக்கிறார்கள். அதனால் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு சின்னதம்பியை பிடிக்க தயாராகி வருகிறார்கள். இப்போதைக்கு செங்கல் சூளை, விவசாய தோட்டம் என ஜாலியாக சுற்றி வந்துகொண்டிருப்பதையும் வனத்துறையினர் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இஷ்டத்துக்கு ஆட்டம்
இன்னும் 2 நாள்தான், சின்னதம்பியை மயக்க ஊசி போட்டு பிடித்து கொண்டு போய் முதுமலையில் விட்டுவிடுவோம் என்கிறார்கள். ஆனால் எதை பற்றியும் நினைக்காமல், கூடவே இவ்வளவு நாள் இருந்த விநாயகாவை காணோம் என்றுகூட கவலைப்படாமல் சின்னதம்பி இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டு கொண்டு இருக்கிறது.