கோவை மாவட்டத்தில் 3 நாள் முழு ஊரடங்கு.. எந்த தளர்வும் கிடையாது.. கொரோனா பரவலால் கலெக்டர் அதிரடி
சென்னை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஜூலை 25ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் வரும் 27ம் தேதி திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
நோய்தொற்று ஆரம்பித்த கால கட்டங்களில் சற்று அதிகமாக இருந்தாலும் பிறகு கோவை மாவட்டத்தில் சிறப்பான கட்டுப்பாடு காரணமாக அது குறைந்தது.
புது உச்சம்.. தமிழகத்தில் தீயாக பரவும் கொரோனா.. 6785 பேர் பாதிப்பு.. 21வது நாளாக அசத்தும் சென்னை
கோவை நிலவரம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டம் மற்றும் கோவை நகரத்தில் நோய்த் தொற்று பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் அந்த மாவட்டத்தில் புதிதாக 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே முழு ஊரடங்கு உத்தரவு என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் மாவட்ட கலெக்டர் ராசாமணி.
முழு ஊரடங்கு
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கடந்த 5, 12, 19ம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜூலை 25 மாலை 5 மணி முதல், வரும் திங்கள்கிழமை அதாவது ஜூலை 27 காலை 6 மணி வரை எவ்விதத் தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
எவையெல்லாம் இயங்கும்
மருத்துவம், பால் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும். ஊரடங்கை மீறி, வெளியில் நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உழவர் சந்தை, மார்க்கெட், மளிகைக் கடைகள், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், இறைச்சிக் கடைகள், டாஸ்மாக் கடைகள், வர்த்தக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட எவ்வித அமைப்புகளும் இயங்காது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காரணம்
ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு என்று கூறினால், சனிக்கிழமை மாலையே கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இது ஒரு பிரச்சனையாக மாறுகிறது. குறிப்பாக இறைச்சி கடைகளில் அதிக அளவுக்கு கூட்டம் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவேதான், நாளை மாலை 5 மணி முதலே ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. இதன் மூலம் அலுவலகம் முடிந்து வருவோர், நேரடியாக வீடு செல்வார்களே தவிர, கடைகளில் சென்று கூட்டம் கூட மாட்டார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.