பெரிய பாறை உருண்டு.. கையிலிருந்த இரண்டரை வயது குழந்தை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட துயரம்!
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது
கோவை: ஒரு பெரிய பாறை உருண்டு வந்து விழுந்ததில்.. கையில் வைத்திருந்த இரண்டரை வயது குழந்தை வெள்ளத்தில் அடித்து கொண்டு போய்விட்டது. 5 நாள் கழித்து அழுகிய நிலையில் அந்த குழந்தை தற்போது மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாகவே கோவை மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஆனைமலை வட்டாரத்தில் இதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதில் ஏற்பட்ட ஒரு துயர சம்பவம் மக்களை கவலை கொள்ள செய்துள்ளது.
ஆனைமலை அடுத்த சர்க்கார்பதி பகுதியில் கடந்த 8-ந் தேதி நல்ல மழை பெய்தது. இதனால் சுற்றியிருந்த மலைப்பகுதியில் இருந்து பெரிய பெரிய கற்கள் உருண்டு விழுந்தன. மண் சரிவும் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த மலைவாழ் மக்கள் குடியிருப்பில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் சேதமடைந்தன. அதனால் அந்த வீடுகளில் இருந்த மக்கள் பதறியபடியே பக்கத்தில் இருந்த மின்வாரிய குவார்ட்டஸில் தஞ்சம் புகுந்தனர்.
அப்போது ஒரு தம்பதி, கையில் இரண்டரை வயது குழந்தை சுந்தரியை தூக்கி கொண்டு ஓடிவந்தபோது, பெரிய கல் ஒன்று உருண்டு இவர்கள் மீது விழுந்தது. இதில் குழந்தையை கை தவறி விழுந்துவிடவும், அது வெள்ளம் அடித்துச்சென்றது. இரவெல்லாம் மலைவாழ் மக்கள் குழந்தையை வெள்ளத்தில் தேடினார்கள். மீட்கவே முடியவில்லை. பின்னர், வனத்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரிய துறையினரின் உதவியுடன் குழந்தையை தேடினர்.
கடைசியில் சர்க்கார்பதியில் இருந்து சுமார் 4 கி.மீட்டர் தொலைவில் உள்ள கால்வாயில் அழுகிய நிலையில் குழந்தையை மீட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை, 5 நாட்களுக்கு பிறகு, தண்ணீர் வற்றிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது மலைவாழ் மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.